‘மரியாதை தெரியாதவர், புத்தியில்லாதவர்’: கோலியை வறுத்தெடுத்த மிட்ஷெல் ஜான்ஸன்

‘மரியாதை தெரியாதவர், புத்தியில்லாதவர்’: கோலியை வறுத்தெடுத்த மிட்ஷெல் ஜான்ஸன்
Updated on
2 min read

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிறிதுகூட மரியாதை தெரியாத மனிதர், புத்தியில்லாதவர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஜான்ஸன் விளாசியுள்ளார்.

பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. இந்தப் போட்டியின் இடையே கேப்டன் விராட் கோலிக்கும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு நடுவர் கஃபானே வந்து சமாதானம் செய்து அனுப்பினார். 2-வது முழுமையுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது.

இந்நிலையில், போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து மைதானத்தில் இருந்து வெளியேறியபோது, கேப்டன் விராட் கோலி, ஆஸி. கேப்டன் டிம் பெய்னிடம் நடந்து கொண்ட முறையையும், நடத்தையையும் முன்னாள் வீரர் மிட்ஷெல் ஜான்ஸன் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தப் போட்டியில் இரு கேப்டனும் வார்த்தையால் மோதிக்கொண்ட போதிலும்கூட, இருவரும் எல்லை மீறி நடந்துகொள்ளவில்லை.

ஆஸி. முன்னாள் வீரர் மிட்ஷெல் ஜான்ஸன் ‘ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்’ தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''பெர்த் டெஸ்ட் போட்டி முடிந்த பின் கோலியும், பெய்னும் ஒருவருக்கு ஒருவர் மைதானத்தில் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், பெய்ன் நாகரிகமான முறையில்தான் நடந்து கொண்டு, கோலியைப் பார்த்து சிரித்தார். ஆனால், கோலிதான் நாகரிமில்லாமல் பெய்னிடம் கைகுலுக்கி முறைத்துப் பார்த்துக் கொண்டு சென்றார். என்னைப் பொறுத்தவரை இது மிகவும் அவமரியாதைக்குரியது ஆகும்.

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் என்ற அகந்தையில் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களை கோலி எளிதாக, தனக்குக் கீழாக நினைக்கிறார். இந்த டெஸ்ட் போட்டியில் கோலி புத்தியற்றவர்போல் நடந்து கொண்டார்.

கோலியின் பேச்சுக்கும், செயல்பாட்டுக்கும் இடையே முரண்பாடு இருக்கிறது. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் அளித்த வாக்குறுதிகள் எதையும் கோலி காப்பாற்றவில்லை.

எந்தவிதமான மோதல்களிலும் ஈடுபடமாட்டோம், கடந்த முறை வந்த விராட் கோலி அல்ல நான், நான் மனதளவில் மாறுபட்டு வந்திருக்கிறேன் என்றார். ஆனால், அப்படிக்கூறிவிட்டு களத்தில் ஆஸி. கேப்டனுடன் இவ்வாறு நடந்து கொள்கிறார்.

நான் கோலியுடன் பழகியதில் இருந்து, நான் அவரிடம் இருந்து என்ன புரிந்துகொண்டேன் என்றால், அவர் இன்னும் சிறிதுகூட மாறவில்லை என்பதுதான். கடந்த முறை பயணத்தின் போது எப்படி இருந்தாரோ அதேபோன்றுதான் இப்போதும் இருக்கிறார். இது மிகவும் வேதனையாக இருக்கிறது. அதுமட்டுமல்லமல், அவரின் மரியாதையையும் குறைத்துவிட்டது.

பெர்த் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் ஹேண்ட்ஸ்கம்ப் கேட்ச் கோலி அடித்த பந்தை கேட்ச் பிடித்துவிட்டார். ஆனாலும், அவர் களத்தில் இருந்து வெளியே செல்ல மறுத்தார். என்னைப் பொறுத்தவரை மைதானத்தில் உள்ள நடுவர் அவுட் கொடுத்தவுடன் அதை ஏற்றுக்கொண்டு, அங்கிருந்து நகர்ந்திருக்க வேண்டும்''.

இவ்வாறு ஜான்ஸன் தெரிவித்துள்ளார்.

ஆனால், பெர்த் டெஸ்டில் விராட் கோலிக்கும், ஆஸி. கேப்டன் பெய்னுக்கும் இடையே எந்தவிதமான மோதலும் நடக்கவில்லை என்று பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in