Published : 30 Dec 2018 02:36 PM
Last Updated : 30 Dec 2018 02:36 PM
இந்தியாவின் ‘டாப் கிளாஸ்’ பந்துவீச்சை எதிர்கொள்வதில் எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள். வார்னர், ஸ்மித் இல்லாத அனுபவமற்ற அணியாக இருக்கிறோம் என்று ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆனால், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய பான் கிராஃப்ட்டுக்கு தடை நீங்கியுள்ள நிலையில், ஸ்மித், வார்னருக்கு தடை வரும் மார்ச் மாதம்தான் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்னில் நடந்த பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறுவதற்கு பெரும்பாலான இந்திய வீரர்களின் டாப் கிளாஸ் வேகப்பந்துவீச்சு, அனுபவமான பேட்டிங் காரணம் என்று முன்னாள் வீரர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். சிட்னியில் அடுத்து நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்தியா சமன் செய்துவிட்டால் அல்லது வென்றுவிட்டால் கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும்.
டெஸ்ட் போட்டி முடிந்த பின் ஆஸி கேப்டன் டிம் பெய்ன், இணை கேப்டனும் 7 வயது சிறுவன ஆர்ச்சி சில்லரும் கைகொடுத்து இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த காட்சி(வீடியோ)
Onya Archie! What a week he's had leading the Aussie team in Melbourne.
And great stuff here from the Indian players and match officials after the Test match! #AUSvIND pic.twitter.com/Q0jRn52Jck— cricket.com.au (@cricketcomau) December 30, 2018
இந்நிலையில், இந்தப் போட்டியில் அடைந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:
''அணியில் அனுபவம் மிகுந்த வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாத வெற்றிடத்தை நாங்கள் உணர்கிறோம். இப்போது அனுபவமற்ற அணியாக நாங்கள் இருக்கிறோம். இதனால் எங்களுக்குப் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் அதிகரிக்கிறது.
இந்தியாவின் டாப்கிளாஸ் பந்துவீச்சை நாங்கள் எதிர்கொள்வதில் தோல்வி அடைந்துவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பலரின் பந்துவீச்சை இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்கொண்டதில்லை. உலகின் சிறந்த வீரர்கள் எனப் பட்டியலிட்டு அதில் 3 வீரர்களைத் தேர்வு செய்தால்கூட நிலைத்தன்மை இல்லாவிட்டால், அவர்கள் அனைத்து ஆடுகளங்களிலும் பேட் செய்ய திணறத்தான் செய்வார்கள்.
பெர்த் ஆடுகளம் பேட் செய்வதற்கு கடினமாக இருந்தது. அங்கு உண்மையில் ஆடுகளத்தில் பிளவுகள் இருந்தன. ஆனால், இந்தப் போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் சிறிது வேதனை அளிக்கிறது. இதுபோன்று அடிக்கடி நடக்கிறது. இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து எங்கள் தவறுகளை திருத்திக்கொண்டு முன்னேறி வருகிறோம். கடந்த 2 போட்டிகளில் செய்த தவறுகளை இந்தப் போட்டியில் செய்யாமல் தவிர்த்திருக்கிறோம்.
ஆனால், இந்திய அணி போன்ற டாப் கிளாஸ் பந்துவீச்சு இருக்கும் இடத்தில், அனுபவமில்லாத எங்களின் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வது சிரமமே. இன்னும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போதுதான் வீரர்கள் அனுபவத்தைப் பெற முடியும் என்று நினைக்கிறேன்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு எந்தவிதமான குறைசொல்லமுடியாத அளவுக்குத் துல்லியமாக இருந்ததால்தான் விக்கெட்டுகளை இழந்தோம். எங்களால் ரன்களைக் குவிப்பதும் கடினமாக இருந்தது சரியான தொடக்கத்தை அளிக்க முடியாமல் போனது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மிகச்சிறப்பாக பேட் செய்தனர். அப்போது இருந்தே நாங்கள் பின்னடைவைச் சந்தித்தோம். ஆடுகளத்தைப் பார்த்தவுடன் இது மோசாக இருக்கிறது என்பதை உணர்ந்தோம். அதற்கு ஏற்றார்போல், இந்திய அணியின் துல்லியமான வேகப்பந்துவீச்சுக்கு எதிராகப் போராடினோம். சிட்னி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்தால், இதோபோன்று இந்தியாவுக்கும் நடக்கலாம்.
ஒட்டுமொத்தமாகக் கூறினால் எங்களை வெளியேற்றிவிட்டார்கள். வெற்றிக்குத் தகுதியானவர்களாக மாறிவிட்டனர் இந்திய அணியினர். புகழ் அனைத்தும் இந்திய அணிக்குத்தான்''.
இவ்வாறு பெய்ன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT