Published : 18 Dec 2018 06:44 PM
Last Updated : 18 Dec 2018 06:44 PM

7 விதமான பந்துகளை வீசும் தமிழகத்தின் புதிர் ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்திக்கு அடித்தது ஜாக்பாட்: ரூ.8.4 கோடிக்கு கிங்ஸ் லெவன் ஒப்பந்தம்

ஐபிஎல் 2018-க்கான ஏலம் நடைபெற்று வருகிறது, இதில் அதிக விலை போன வீரர்க்ளில் ஜெய்தேவ் உனாட்கட் (ரூ.8.4 கோடி ராஜஸ்தான்), இவருக்குச் சமமாக தமிழகத்தின் புதிர் ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தியும் ரூ.8.4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாபினால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

 

யார் இந்த வருண் சக்ரவர்த்தி?

 

13 வயது முதல் கிரிக்கெட் ஆடி வருகிறார், 17 வயது வரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனாக இருந்தார். பலமுறை அணியில் தேர்வாகாத நிலையில் எஸ்.ஆர்.எம். பல்கலையில் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றார். 5 ஆண்டுகள் பணியாற்றிய போது டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆடிவந்தார். இது இவரது கிரிக்கெட் ஆசியை உசுப்பி விட வேலையை ராஜினாமா செய்து விட்டு குரோம்பெஸ்ட் கிரிக்கெட் கிளப்பில் இணைந்தார். அங்கு அவர் பவுலிங் ஆல்ரவுண்டர்.

 

பிறகு சென்னை 4வது டிவிஷன் ஜூபிளி கிளப்புக்கு ஆடினார்.  2017-18-ல் 7 ஆட்டங்களில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  பேட்டிங்கிலும் ஒருமுறை 74 விளாசி தன் அணியை வெற்றி பெறச் செய்தார்.

 

இவர் தன்னிடம் 7 விதமான பவுலிங்குகள் இருப்பதாகத் தெரிவித்தார். ஆஃப் பிரேக், லெக் பிரேக், கூக்ளி,  கேரம் பால், ஃபிளிப்பர், டாப் ஸ்பின்னர், யார்க்கர்.

 

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) டி20 கிரிக்கெட்டில் சைசெம் மதுரை பேந்தர்ஸ் அணி முதல் முதலாக 2018- ல் கோப்பையை வெல்ல இவரது ஸ்பின் மிக முக்கியப் பங்களிப்பு செய்தது. சிஎஸ்கே வலைப்பயிற்சியில் பவுலிங் செய்துள்ளார்.  புனேயில் கேகேஆர் வலைப்பயிற்சியிலும் வீச இவரை தினேஷ் கார்த்திக் அழைத்தார்.

 

மைக் ஹஸ்சி இவரை மிகப்பிரமாதமான திறமை உடையவர் என்று டி.என்.பி.எல் கிரிக்கெட் வர்ணனையில் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது ரூ.8.4 கோடிக்கு இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஏலம் எடுத்து கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x