Published : 09 Dec 2018 09:33 AM
Last Updated : 09 Dec 2018 09:33 AM

பிசிசிஐ ஆயுட்கால தடை கடுமையானது: ஸ்ரீசாந்த்

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்  ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ ஆயுட்கால தடை விதித்தது.  சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த்தை, டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு விடுவித்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தன் மீதான ஆயுட்கால தடையை நீக்க கோரி ஸ்ரீசாந்த், பிசிசிஐ-யிடம் முறையிட்டார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. கேரள நீதிமன்றத்தின் தனி நீதிபதி, ஸ்ரீசாந்துக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பையும் மேல்முறையீடு செய்து பிசிசிஐ வெற்றி கண்டது.

இந்நிலையில் ஆயுட்கால தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான விசாரணையின் போது ஸ்ரீசாந்த்தின் வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் வாதாடுகையில், “ இங்கிலாந்தில் உள்ள கிளப் போட்டிகளில் விளையாட ஸ்ரீசாந்த்துக்கு அழைப்பு வந்துள்ளது. அவருக்கு தற்போது 35 வயதாகிறது. ஆயுட்கால தடையை நீக்காவிட்டால் அவரால் விளையாட முடியாது. அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடை மிகவும் கடுமையானது. சூதாட்ட வழக்கில் இருந்து அவரை டெல்லி உயர் நீதிமன்றம் விடுவித்து இருந்தது. மேலும் அசாருதீனுக்கும் பிசிசிஐ வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த தடை நீதிமன்றத்தால் விலக்கப்பட்டது.

அதை உதாரணம் காட்டி, அவருக்கு வாழ்நாள் தடையை பிசிசிஐ விலக்கிக் கொள்ளும்போது ஸ்ரீசாந்துக்கும் வாழ்நாள் தடையை நீக்க வேண்டும்” என்றார்.

இதற்கிடையே டெல்லி காவல்துறை சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்றத்தின் முடிவு வரும் வரை காத்திருக்குமாறு கூறி, உச்ச நீதிமன்றம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி மூன்றாம் வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x