Published : 20 Dec 2018 01:22 PM
Last Updated : 20 Dec 2018 01:22 PM
எனக்கு ஓய்வெடுக்க நேரமில்லை, 23 வயது இளம்பெண்களின் கனவுகள் எதுவும் எனக்கு இல்லை என்கிறார் உலக சாம்பியன் பி.வி.சிந்து.
7 தொடர் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய பாட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து, பேட்மிண்டன் உலக டூர் பைனல்சில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹராவை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்து பெருமை சேர்த்தார்.
இதையடுத்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார். அப்போது சிந்துவிடம், 'வரலாற்று சாதனை படைத்துவிட்டீர்கள். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? ஓய்வெடுக்கப் போகிறீர்களா?' என்று கேள்வி எழுப்ப்பப்பட்டது. அதைக் கேட்டு சிரித்த சிந்து, ''இல்லை. லீக் போட்டிகள் 22-ம் தேதி தொடங்குகின்றன. இதனால் ரிலாக்ஸ் செய்யவோ, ஓய்வெடுக்கவோ நேரமில்லை. ஏற்கெனவே பயிற்சிக்குள் வந்துவிட்டேன்'' என்றார்.
'மற்ற 23 வயது இளம்பெண்கள் செய்யும் செயல்களை சிந்து செய்கிறாரா, சமீபத்தில் கூட பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா உங்களுடன் டேட்டிங் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தாரே?' என்ற கேள்விக்கு, ''நானும் அதைக் கேள்விப்பட்டேன். ஆனால் என்னுடைய பதில் நோ. இப்போதைக்கு எனக்கு பாட்மிண்டன் தான் எல்லாமே. ஏனெனில் நான் என்ன செய்கிறேனோ அதை ரசித்தே செய்கிறேன்.
23 வயது இளம்பெண்களின் வாழ்க்கையை உங்களால் வாழமுடியாது; நீங்கள் வெளியே செல்லமுடியாது என்று சிலர் சொல்லலாம். அது உண்மைதான். என்னால் முடியாது. ஆனால் என்னை எல்லோருக்கும் தெரியும்; நான் சென்றால் அடையாளம் கண்டுகொள்வர் என்ற உணர்வு அலாதியானது.
என்னிடம் பேசுவதும் என்னை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு செயல்படுவதும் எனக்குள்ள கட்டுப்பாடுகளைக் காட்டிலும் சிறப்பானவை.
பயணம் எனக்குப் பிடித்தமான ஒன்று. சுற்றுலா செல்வதில்லையே தவிர போட்டிகளுக்காக நான் ஏராளமான இடங்களுக்குச் செல்கிறேன். நான் இருக்கும் நிலையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்றார் சிந்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT