

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் கடைசி நேர பரபரப்புக்குப் பிறகு அஸ்வினுக்கு 2வது ஸ்லிப்பைக் கோலி கொண்டு வர கடைசி விக்கெட்டை அஸ்வின் வீழ்த்த இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது.
4-5 நாள் கடுமையான பயிற்சி, உழைப்பு என்று வீரர்கள் களைத்துப் போயிருப்பதாகக் கூறிய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலைப்பயிற்சி வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:
இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் போட்டியை 31 ரன்களில் இழந்தோம். தென் ஆப்பிரிக்காவில் 60-70 ரன்களில் இழந்தோம், ஆகவே அடிலெய்ட் முதல் டெஸ்ட்டில் வெற்றிபெற்றது ஒரு நல்ல உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. நல்ல முறையில் தொடரைத் தொடங்கினால் அது நம்பிக்கையை பறைசாற்றுவதாக உள்ளது.
பவுலர்களுக்கு ஓய்வு தேவை, வலைப்பயிற்சியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். இங்கு வாருங்கள் அட்டெண்டன்சில் கையெழுத்து போட்டு விட்டு விடுதிக்குத் திரும்புங்கள்.
பெர்த் பிட்ச் அதிவேக பிட்ச் என்று தெரியும். இதுவும் வெளியில் செய்து இங்கு கொண்டு வந்து பதித்த பிட்ச், எனவே வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் அதிகமிருக்கும்.
ரிஷப் பந்த் அவர் பாணி ஆட்டத்தை ஆட அனுமதிக்க வேண்டும். இப்போது அவர் கொஞ்சம் சமயோசிதமாக ஆட வேண்டும், யோசித்து ஆட வேண்டும். நேதன் லயனை நாலு சாத்து சாத்தி அவர் களவியூகத்தை பரவலாக்கச் செய்தார் பந்த். அதன் பிறகு பார்த்து ஆட வேண்டும். தவறு செய்து விட்டார், மீண்டும் இதைச் செய்ய கூடாது, மீண்டும் செய்தால் நான் அவர் காதுகளுக்குள் சில விஷயங்களை ஓத வேண்டி வரும்.
இவ்வாறு கூறினார் ரவிசாஸ்திரி