Published : 30 Dec 2018 12:55 PM
Last Updated : 30 Dec 2018 12:55 PM

மெல்போர்ன் வெற்றி: ஆஸி. வீரர் ஜான்ஸன் கருத்துக்கு ஹர்பஜன் சிங் பதிலடி

மெல்போர்ன் டெஸ்ட்டில் இந்திய அணி வென்றிருக்கலாம், சிட்னி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று கூறிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்ஷெல் ஜான்ஸனுக்கு இந்திய வீரர் ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

மெல்போர்னில் நடந்த 3-வது பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி கண்டது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது இந்திய அணி.

அதுமட்டுமல்லாமல் 37ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளில் வெல்வது முதல் முறையாகும்.

இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டதால் இந்த வெற்றி வசமானது. மிகப்பெரிய இலக்கை பேட்ஸ்மேன்கள் வழங்க, பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இந்திய அணியை அனைத்து ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் புகழ்ந்து வரும் நிலையில், சில ஆஸ்திரேலிய வீரர்களும் மறைமுகமாக விமர்சித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்ஷெல் ஜான்ஸன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ இந்திய அணி பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு ஆகிய துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிப்பது பாராட்டு. ஆனால், இந்தியா இந்த டெஸ்ட் தொடரை வெல்வதைத் தடுக்க வேண்டும். அதற்கு ஆஸ்திரேலியா சிட்னியில் கடுமையாகப் போராட வேண்டும். புத்தாண்டைக் கொண்டாடுங்கள்” எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்து இந்திய வீரரும், சிஎஸ்கே வீரருமான ஹர்பஜன்சிங் தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “ இந்தியாவின் இப்போதுள்ள வீரர்களின் அற்புதமான ஆவேசமான பந்துவீச்சில், சிட்னி டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திகைத்து நிற்கப்போகிறார்கள் ஜான்ஸன். . புத்தாண்டைச் சந்தோஷமாகக் கொண்டாடுங்கள். டெஸ்ட் தொடரை 3-1 என்று வெல்லப் போகிறோம் பாருங்கள்” என கிண்டலாகத் தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x