Published : 18 Dec 2018 12:04 PM
Last Updated : 18 Dec 2018 12:04 PM

கோலி திமிர் பிடித்த, உலகத்திலேயே ஒழுக்கக் கேடான விளையாட்டு வீரர்: பாலிவுட் நடிகர் நசீருதின் ஷா காட்டம்

கோலி திமிர் பிடித்த, உலகின் ஒழுக்கக் கேடான விளையாட்டு வீரர் என்று பிரபல பாலிவுட் நடிகர் நசீருதின் ஷா  தெரிவித்துள்ளார்.

பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு இடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, இருவரையும் நடுவர்கள் எச்சரித்து அனுப்பினர்.

இதுகுறித்து ஆஸி. முன்னாள் வீரர் மைக் ஹசி வர்ணனையில் பேசுகையில், ''கோலி கட்டுப்பாட்டை இழந்து செயல்படுகிறார். இதுபோன்ற செயலை இப்போது நான் விரும்பவில்லை'' என்றார்.

இரண்டு கேப்டன்களுக்கும் இரண்டு முறை நடைபெற்ற வார்த்தை மோதலைத் தொடர்ந்து, கோலி தனது கோபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் நசீருதின் ஷா கோலியை உலகின் ஒழுக்கக் கேடான விளையாட்டு வீரர் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள  நசீருதின் ஷா, ''விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, ஒழுக்கக் கேடான விளையாட்டு வீரரும் கூட. கோலியின் அகந்தை மற்றும் மோசமான நடத்தைகள் அவரின் கிரிக்கெட் திறமையை மறைத்துவிடுகின்றன. மேலும் எனக்கு நாட்டை விட்டு வெளியேறும் எந்த எண்ணமும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் விராட் கோலி கருத்து தெரிவித்திருந்தார். இதைக் கிண்டல் செய்யும்விதமாகவே ஷா இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இணையவெளியில் நசீருதின் ஷாவின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கோலியின் ரசிகர்களிடையே நசீருதின் ஷாவின் கருத்து கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x