Published : 02 Dec 2018 01:26 PM
Last Updated : 02 Dec 2018 01:26 PM
சேவாக்கின் அனுமதியில்லாமல் அவரின் பெயரை தவறாகப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதற்காக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் கட்சியை ட்விட்டரில் சேவாக் கடுமையாக விளாசியுள்ளார்.
'மக்களை ஏமாற்றுவதற்கு என் பெயரை பயன்படுத்தாதீர்கள்' என்று சேவாக் கடுமையாகச் சாடியுள்ளார்.
துபாயில் நடைபெறும் டி10 போட்டியில் மராத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பணியில் சேவாக் இருக்கிறார். இந்நிலையில், ராஜஸ்தானில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, அங்குள்ள மாநிலக் கட்சியான ராஷ்ட்ரிய தந்ரிக் கட்சி சேவாக்கின் பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
இந்த விஷயம் சேவாக்குக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு ஆத்திரமும், கோபமும் அடைந்த சேவாக், ட்விட்டரில் கடும் கண்டனத்துடன் பதிவு வெளியிட்டார்.
அதில் அவர் கூறுகையில், “ பொய்யர்களுக்கு எச்சரிக்கை, நான் துபாயில் இருக்கிறேன். எந்தவிதமான கட்சியினருடன் நான் எந்தத் தொடர்பும் வைக்கவில்லை. இந்தப் பொய்யர்கள் சிறிதுகூட வெட்கம் இல்லாமல், எனது பெயரைப் பயன்படுத்தி ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள், மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். மக்களை ஏமாற்ற என் பெயரைப் பயன்படுத்தாதீர்கள். ஆட்சிக்கு வருவதற்காக மக்களை ஏமாற்ற என்னவெல்லாம் செய்கிறார்கள். பொய், வஞ்சம் ஆகியவற்றைக் காட்டிலும் மற்றவை அனைத்தும் சிறந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கடந்த 2015-ம் ஆண்டு கிரிக்கெட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால், அதற்குப்பின் பல்வேறு அணிகளுக்குப் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் கிங்க்ஸ் லெவன் அணியின் ஆலோசகர் பதிவியில் இருந்து விலகிய சேவாக், துபாயில் நடைபெற்றுவரும் டி10 போட்டியில் மராத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT