Published : 28 Dec 2018 05:49 PM
Last Updated : 28 Dec 2018 05:49 PM
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் புகழ்பெற்ற Bay 13 ஸ்டாண்டிலிருந்து நிறவெறி வசைபாடிய ஆஸ்திரேலிய ரசிகர்களை மைதான நிர்வாகம் வெளியேற்றியது பரபரப்பானது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்னில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது, இதில் இந்திய அணி முதல் 2 நாட்களில் ஆஸ்திரேலிய பந்து வீச்சை வறுத்து எடுத்து 443 ரன்களை எடுத்ததோடு ஆஸ்திரேலியாவை இன்று 151 ரன்களில் சுருட்டியது.
ஏற்கெனவே வார்னர், ஸ்மித் இல்லாத வெறுப்பில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் டெஸ்ட் போட்டிகளைப் பார்த்து வருகின்றனர், இந்நிலையில் இந்திய ஆதிக்கம் அவர்களை மேலும் கடுப்பேற்றியதோ என்னவோ தெரியவில்லை, தொடர்ந்து இந்திய ரசிகர்களை நோக்கியும் வீரர்களையும் உள்ளடக்குமாறு, ‘உங்கள் விசாவைக் காட்டுங்கள்’ என்று ரசிகர்களில் ஒரு பகுதியினர் கூச்சலிட்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை மைதானத்திலிருந்து வெளியேற்றிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா ரசிகர்களின் பிற பகுதியினருக்கும் நிறவெறிக்கூச்சல் வேண்டாம் சட்ட நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
3ம் நாளான இன்றும் கடும் கண்காணிப்பினால் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிறவெறிக்கூச்சலின் வீடியோவை ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப அவர்கள் விக்டோரியா போலீச் மற்றும் ஸ்டேடியம் நிர்வாகத்துக்கும் அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதோடு மட்டுமல்ல இந்திய கேப்டன் விராட் கோலியை நோக்கியும் நிறவெறி வசை, தனிநபர்த் தாக்குதல் வசை பேசப்பட்டுள்ளது. Kohli's a wanker என்றும் கூச்சலிட்டுள்ளனர் ‘வாங்க்கர்’ என்றால் ஒரு மோசமான அர்த்தம் 19-ம் நூற்றாண்டு பிரிட்டனில் புழங்கி வந்தது பிறகு அதுப் பரவப் பரவ பொதுப்படையான வெறுக்கத்தக்க மனிதன் என்ற அர்த்தம் கொள்ளத் தொடங்கியது. எப்படியாகினும் இது நிறவெறி வசையே என்கிறது கிரிக்கெட் ஆஸ்திரேலிய வட்டாரங்கள்.
அதே போல் முதல் நாளின் போது விக்டோரியா வீரர் ஹேண்ட்ஸ்கம்ப் இடத்தை மிட்செல் மார்ஷ் பிடித்துக் கொண்டதால் விக்டோரியா ரசிகர்கள் மிட்செல் மார்ஷ் மீது வசைபாடியதும் நிகழ்ந்தது.
இப்போது என்றல்ல மெல்போர்ன் ரசிகர்கள் எப்போதுமே எதிரணி வீரர்கள், கேட்பன்களை நிறவெறி வசைபாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது எளிதில் நிரூபிக்கப் படக்கூடியதே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT