Published : 12 Nov 2018 06:08 PM
Last Updated : 12 Nov 2018 06:08 PM
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்ட டி20 தரவரிசைப் பட்டியலில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் குறிப்பிடத்தகுந்த உயர்வு பெற்றுள்ளார்.
மேலும், கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவண், புவனேஷ்குமார், பும்ரா ஆகியோரும் தரவரிசையில் உயர்ந்துள்ளனர்.
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய, பேட் செய்த வீரர்கள் டி20 தரவரிசையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தைப் பெற்றுள்ளனர்.
இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் டி20 தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதையடுத்து 14 இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்கள் வரிசையில் 23-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். இது டி20 தரவரிசையில் குல்தீப்பின் சிறப்பான உயர்வாகும்.
வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 9 இடங்கள் உயர்ந்து, முதல் 20 பந்துவீச்சாளர்கள் பட்டியலுக்குள் நுழைந்து 19-வது இடத்தையும், பும்ரா 5 இடங்கள் முன்னேற்றம் கண்டு 21-வது இடத்தில் உள்ளார்.
கேப்டன் ரோஹித் சர்மா பேட்ஸ்மேன் தரவரிசையில் 3 இடங்கள் உயர்ந்து 7-வது இடத்திலும், தவண் 5 இடங்கள் அதிகரித்து, 16-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அணிகளுக்கான தரவரிசையில், பாகிஸ்தான் அணி தொடர்ந்து முதலிடத்திலும், இந்திய அணி 127 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் அணி 138 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதல் 4 இடங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் முதலிடத்திலும், முகமது நபி 2-வது இடத்திலும், வங்கதேச வீரர் சஹிப் அல் ஹசன், தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி முறையே 3, 4ம் இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு டி20 போட்டி வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பின் இந்திய அணியுடன் 3போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடஉள்ளது. இந்த தொடருக்குப் பின் அணிகள், வீரர்களின் தரவரிசையில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் இருக்கும்.
ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளிலும் வெல்லும்பட்சத்தில் தரவரிசையில் 2-ம் இடத்தை அடையும். ஒருவேளை 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் 112 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்குத் தள்ளப்படும். அதேசமயம், தென் ஆப்பிரிக்கா ஒரே ஒரு டி20 போட்டியை வென்றால், 3 புள்ளிகள் கிடைக்கும். இந்தியா 3 போட்டிகளிலும் வென்றால், 129 புள்ளிகளுக்கு இந்திய அணி முன்னேறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT