Published : 23 Nov 2018 09:40 AM
Last Updated : 23 Nov 2018 09:40 AM
ஆன்டிகுவாவில் இன்று நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது இங்கிலாந்து அணி.
இதையடுத்து, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கும், ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளன. ஆஸ்திரேலிய அணி 3 முறை சாம்பியன் பட்டத்தையும், இங்கிலாந்து ஒருமுறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 19.3 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 24 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். ரோட்ரிக்ஸ் 26 ரன்களும், கேப்டன் கவுர் 16 ரன்களும் சேர்த்தனர். தமிழக வீராங்கனை ஹேமலதா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகளும் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள்.
இங்கிலாந்து தரப்பில் நைட் 3 விக்கெட்டுகளையும், கோர்டன், எக்கல்ஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
113 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. இந்திய மகளிர் அணியின் நெருக்கடி அளிக்கும் பந்துவீச்சில் முதல்5 ஓவர்களில் 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது.
ஆனால், 3-வது விக்கெட்டுக்கு ஜோன்ஸ், சிவர் இணைந்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தனர். அதிரடியாக ஆடிய இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
சிவர் 37 பந்துகளிலும், ஜோன்ஸ் 46 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.
சிவர் 52 ரன்களும் (3பவுண்டரிகள்), ஜோன்ஸ் 53 ரன்களும் (5பவுண்டரிகள்) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
17.1 ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் சர்மா, யாதவ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள். ஆட்டநாயகி விருது ஜோன்ஸுக்கு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT