Last Updated : 24 Nov, 2018 01:25 PM

 

Published : 24 Nov 2018 01:25 PM
Last Updated : 24 Nov 2018 01:25 PM

3-வது டி20 போட்டி: ஆஸி. அணியில் மிட்ஷெல் ஸ்டார்க் சேர்ப்பு

சிட்னியில் இந்தியாவுக்கு எதிராக நாளை நடைபெறும் 3-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர் பில்லி ஸ்டான்லேக் காயத்தால் அவதிப்படுவதால், அவருக்குப் பதிலாக ஸ்டார்க் சேர்க்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெல்பர்னில் நேற்று நடந்த 2-வது டி20 போட்டியிலும் அணியில் ஸ்டான்லேக் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக நாதன் கோல்டர் நீல் சேர்க்கப்பட்டிருந்தார்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான மிட்ஷெல் ஸ்டார்க் டி20 போட்டியில் விளையாடி ஏறக்குறைய 2ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இலங்கைக்கு எதிரான போட்டியில் ஸ்டார்க் விளையாடினார். அதன்பின் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம் பெறவில்லை.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தீவிரமாகக் கவனம் செலுத்தப்போவதாகச் சமீபத்தில் ஸ்டார்க் ஊடகங்களிடம் தெரிவித்த நிலையில் தற்போது டி20 அணியில் இடம் பெற்றுள்ளார்.

மிட்ஷெல் ஸ்டார்க் அணியில் இணைக்கப்பட்டது குறித்து கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், “ டி20 போட்டி, ஒருநாள் போட்டியில் அதிகமான அனுபவம் உடையவர் ஸ்டார்க். டி20 போட்டியில் எதிரணியினருக்கு நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீசும் திறமையுடைவர் ஸ்டார்க். சிட்னி ஆடுகளத்தை பார்த்தபின், ஆடுகளம் எப்படிப்பட்டது என்பதை அறிந்தபின் விளையாடும் 11பேர்கொண்ட அணியைத் தேர்வு செய்வோம். டெஸ்ட் போட்டிக்காக ஆஸ்திரேலிய அணிதீவிரமாகத் தயாராகி வருகிறது” எனத் தெரிவித்தார்.

சிட்னி மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். ஏற்கெனவே ஜேஸன் பெஹ்ரன்டார்ப், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் கோல்டர் நீல் ஆகியோர் இருக்கும்போது, ஸ்டார்க் இணைந்துள்ளது ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் வலு சேர்க்கும்.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி1-0 என்று முன்னணியில் இருக்கிறது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x