Published : 19 Nov 2018 03:18 PM
Last Updated : 19 Nov 2018 03:18 PM

பெரிய மைதானங்கள்... ரோஹித் சர்மா புல்ஷாட் ‘பாச்சா’ பலிக்காது: ஆஸி. பவுலர் நேதன் கூல்ட்டர் நைல் விரிக்கும் வலை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் என்றாலே தொடருக்கு முன்பும் பின்பும் சூளுரைகள், வார்த்தை மோதல்கள், அதிரடி கருத்துகள் சகஜமானதுதான். அதே வழியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் நேதன் கூல்ட்டர் நைல், ரோஹித் சர்மாவுக்கு தான் விரித்துள்ள வலை பற்றி கூறுகிறார்.

தற்போதைய இந்திய அணியில் ஷார்ட் பிட்ச், பவுன்சர் என்றாலே கட்டுப்படுத்த முடியாமல் புல், ஹூக் ஆடும் ஒரே பேட்ஸ்மென் ரோஹித் சர்மாதான். இந்தியாவில் சிறிய மைதானங்களில் ரோஹித் சர்மாவின் புல்ஷாட்கள் பல காததூரம் போய் விழும், ஆனால் ஸ்கொயர் பவுண்டரிகள் பெரிதாக உள்ள ஆஸ்திரேலிய மைதானங்களில் ரோஹித் சர்மாவை புல் ஆடவைத்து பொறியில் சிக்கவைப்போம் என்கிறார் வேகப்பந்து வீச்சாளர் நேதன் கூல்ட்டர் நைல்.

பிரிஸ்பனில் நாளை மறுநால் நடைபெறும் முதல் டி20 போட்டியை முன்னிட்டு அவர் கூறியதாவது:

ரோஹித் சர்மா ஒரு நம்பமுடியாத வீரர், உலகம் முழுதும் ரன்களைக் குவித்துள்ளார். ஆகவே அவர்தான் கவனிக்கப்பட வேண்டிய வீரர். ஆனால் புதிய பந்தில் அவரை நாங்கள் சில முறை மலிவாக வீழ்த்தியுள்ளோம்.

கடந்த முறை பெஹெண்ட்ராஃப் அவரை கால்காப்பில் தாக்கி ஆட்டமிழக்கச் செய்தார். ஆகவே அவரை அம்முறையில் வீழ்த்த தொடக்கத்தில் வலை விரிப்போம்.  இங்கு ஆஃப் மற்றும் லெக் திசையில் ஸ்கொயர் பவுண்டரிகள் நீளமானது, பெரியது, ஆகவே அவரை சற்று ஷார்ட் பிட்ச், பவுன்சரில் சோதிப்போம். அவரும் கட்டுப்படுத்த முடியாத ஒரு புல்ஷாட் வீரர் என்பதால் பெரிய மைதானங்களில் இங்கு அவரது பாச்சா பலிக்காமல் வலை விரிப்போம்.

மேலும் பெஹெண்ட்ராஃப் தொடக்கத்தில் மிக அருமையான தெரிவு, இங்குள்ள சூழ்நிலைமைகள் அவருக்கு மிகச்சாதகமாக இருக்கும்.

நாங்கள் முதல் போட்டியில் வெல்லாவிட்டாலும் தவறுகளைத் திருத்திக் கொண்டு அதிலிருந்து ஆடலாம், ஆனால் முதல் போட்டியில் வென்று விட்டால் இந்திய அணி மீது எங்கள் ஆதிக்கம் தொடரும்.

இவ்வாறு கூறினார் கூல்ட்டர் நைல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x