Published : 09 Oct 2018 07:57 PM
Last Updated : 09 Oct 2018 07:57 PM
உள்நாட்டுப் போர், தீவிரவாதம் என்று சின்னாபின்னமாகியிருக்கும் ஆப்கானிலிருந்து வந்த அணி என்பதிலிருந்து அனைவரின் விருப்பமான அணியாக ஆப்கான் உருவானது எப்படி என்பதை முன்னாள் கேப்டன் நவ்ரோஸ் மங்கல் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்காகக் பகிர்ந்து கொண்டார்.
ஆப்கான் அணியின் ஆரம்பக் காலக்கட்டங்களில் நவ்ரோஸ் மங்கல் வழிநடத்தினார். பிறகு முக்கிய பேட்ஸ்மெனாக திகழ்ந்தார். இப்போது ஆப்கான் அணியின் தலைமை தேர்வாளராக இருக்கிறார். இவரது இன்னொரு கனவு ஆப்கான் பிரிமியர் லீக் இது வெள்ளி முதல் சாத்தியமானது.
“இது ஆப்கான் கிரிக்கெட்டுடன் பின்னிப் பிணைந்த எங்களுக்கு மிக முக்கியமான தருணம். குறுகிய காலத்தில் லீகை உருவாக்கியுள்ளோம். கடந்த 6 மாதங்களாக ஆப்கான் கிரிக்கெட் வாரியம் கடுமையாக உழைத்து வருகிறது, இந்த லீக் எங்கள் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விஷயமாகும்.
ஐபிஎல், பீபிஎல் ஆகிய கிரிக்கெட் லீகுகள் மூலம் ஸ்டார்கள் உருவாகிறார்கள், அதைத்தான் ஆப்கானிலும் எதிர்பார்க்கிறோம். இப்போது 45 இளம் வீரர்கள் ஆப்கான் பிரிமியர் லீகில் உள்ளனர்.
சர்வதேச அளவில் எங்கள் அணி சிறப்பாக ஆடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றோம், முதல் டெஸ்ட்டை ஆடியிருக்கிறோம், சமீபமாக மிகச்சிறந்த ஆசியக் கோப்பையை ஆடினோம். 2014-ல் இதே ஒருநாள் தொடரில் ஆடும்போது நாங்கள் அனுபவமற்ற அணி, இப்போது இதயங்களை வென்றோம்.
நாங்கள் வலுவான அணிகளுக்கு சவாலாக திகழவே விரும்புகிறோம், முன்பெல்லாம் உணர்ச்சி விருப்பத்துக்காக ஆடினோம் என்று கூறிவந்தோம், இனி அப்படியல்ல, ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறந்து விளங்க விரும்புகிறோம். இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பையில் மிகச்சிறப்பாக ஆடுவதே அடுத்த இலக்கு” என்றார் நவ்ரோஸ் மங்கல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT