Published : 14 Oct 2018 10:28 AM
Last Updated : 14 Oct 2018 10:28 AM

ஹைதராபாத் டெஸ்ட்டில் திருப்பு முனை: மே.இ.அணிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கிய கேப்டன் ஜேசன் ஹோல்டர்

ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் இன்று இந்தியா 700 ரன்களைக் குறைவாகக் குவிக்க வாய்ப்பேயில்லை என்று பேசப்பட்டு வந்த நிலையில் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகள், கேப்ரியல் 3 விக்கெட்டுகள் இந்திய அணியை மீதமுள்ள 6 விக்கெட்டுகளை 59 ரன்களுக்கு இழக்கச் செய்தது.

இந்திய அணி கடைசியில் அஸ்வினின் 35 ரன்களால் 56 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜேசன் ஹோல்டர் 56 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக பேட்டிங்கிலும் முக்கியக் கட்டத்தில் பிரமாதமான அரைசதத்தை எடுத்து ஆல்ரவுண்ட் கேப்டனாக இந்திய அணியை என்ன சேதி என்று கேட்டுள்ளார் ஹோல்டர்.

1994க்குப் பிறகு மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இந்தியாவில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார்.

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியப் பிட்சில் இரு வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்சில் கைப்பற்றியது நிகழ்ந்துள்ளது.

ஷர்துல் தாக்கூர் காயத்தையும் பொருட்படுத்தாமல் இறங்கினார் போன்ற செய்திகள் இனி நெரிசலடையும், அவர் அஸ்வினுடன் சேர்ந்து 28 ரன்கள் சேர்க்க பங்களிப்பு செய்தது பாராட்டத்தக்கது.

ஹோல்டர் கட்டுக்கோப்புடன் வீசினார் ஸ்டம்புகளிலேயே வீசி டைட் ஆக்கிவிட்டு ஒரு பந்தை கொஞ்சம் தள்ளி குத்தி எழுப்பினார் ரஹானேயின் மட்டை விளிம்பில் பட்டு கல்லியில் கேட்ச் ஆனது, 2 பந்துகளில் ஜடேஜாவை பெரிய இன்ஸ்விங்கரில் எல்.பி.செய்தார் ஹோல்டர். அஸ்வினும் இதே போல் பெரிய இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆனார். ஆனால் நடுவர் கொடுக்கவில்லை.

 

இன்னொரு முனையில் ரிஷப் பந்த்துக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளால் கேப்ரியல் தொல்லைக் கொடுத்தார். ஒரு அடியும் வாங்கினார், கடைசியில் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை பஞ்ச் செய்தார் ரிஷப் பந்த் கவர் பாயிண்டில் ஹெட்மையரின் அதியற்புத கேட்சுக்கு வெளியேறினார். குல்தீப் யாதவ்வும் உள்ளே வந்த பந்தில் ஹோல்டரிடம் பவுல்டு ஆனார். உமேஷ் யாதவ், இடது கை ஸ்பின்னர் வாரிகனை கட் ஆட முயன்று 2 ரன்களில் வெளியேற இந்திய அணி 339/9. அதன் பிறகு ஷர்துல் தாக்குர், அஸ்வின் (35) இணைந்து 28 ரன்களைச் சேர்த்தனர், கடைசியில் அஸ்வின் கேப்ரியல் பந்தில் அடி வாங்கியதால் அடுத்த பந்துக்கு கால் நகரவில்லை, கேப்ரியல் வைட் ஆஃப் த கிரீசிலிருந்து வீசி மிடில் ஸ்டம்ப்பைப் பெயர்த்தார்.

மே.இ.தீவுகள் அணிக்கு இது ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 200-250 ரன்கள் என்பதே 4வது இன்னிங்ஸ் என்றால் பிரஷர் சூழ்நிலைதான். பொறுத்திருந்து பார்ப்போம், அதற்குள் 2வது இன்னிங்சில் 100 ரன்களுக்குள் வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் ஆகாமல் இருக்க வேண்டுமே...

முந்தைய பதிவு

 

ரஹானே, ரிஷப் பந்த் சதக் கனவு முறியடிப்பு; புதிய பந்து வேலை காட்டியது;ஒரே ஓவரில் ஹோல்டர் 2 விக்கெட்டுகள்

ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் இன்று ரிஷப் பந்த், அஜிங்கிய ரஹானே இருவரும் சதம் எடுப்பார்கள் என்று ஆசையாகக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது.

புதிய பந்துடன் ஹோல்டர் தொடங்கி பாசிட்டிவ் ஆன களவியூகத்தில் ஒரே ஓவரில் ரஹானே, ஜடேஜாவை காலி செய்தார், கேப்ரியல், ரிஷப் பந்த்தின் சதக்கனவை முறியடித்தார்.

காரணம் ரஹானே, 80 ரன்களிலும் ரிஷப் பந்த் மீண்டும் 92 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

3ல் நாளான இன்று 308/4 என்று தொடங்கிய இந்திய அணி சற்று முன் வரை 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

இன்று காலை ரஹானே, ஹோல்டரை மிகப்பிரமாதமான எக்ஸ்ட்ரா கவர் ட்ரைவ் பவுண்டரி மூலம் தொடங்கினார்.

ரிஷப் பந்த், கேப்ரியலின் எகிறு பந்தில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு அடி வாங்கினார். ஷேய் ஹோப் ரஹானேவின் நிச்சய பவுண்டரி ஒன்றை அருமையாகத் தடுக்க மே.இ.தீவுகள் குறிக்கோளுடன் இறங்கியது தெரிந்தது.

இந்நிலையில் ஹோல்டர் தன் 16வது ஓவரை வீச, முதலில் ரஹானே, கூடுதல் பவுன்சில் நேராக கல்லியில் ஷேய் ஹோப்பிடம் கேட்ச் ஆகி ரஹானே 80 ரன்களில் வெளியேறினார், அருமையான இன்னிங்ஸ், அருமையான பந்து வீச்சில் முடிவுக்கு வந்தது.

இதே ஓவரில் ஜடேஜா இறங்கி பெரிய அளவில் உள்ளே வந்த பந்தை ஆடாமல் விட்டு ஆஃப் ஸ்டம்புக்கு அருகில் சென்றது பந்து. ஆனால் அடுத்த பந்தே மீண்டும் பெரிய அளவில் உள்ளே வர எல்.பி.ஆனார். இயன் கோல்ட் சந்தேகமின்றி கையை உயர்த்தியதால் ரிவியூ கேட்கும் முயற்சியை ஜடேஜா எடுக்கவில்லை, கடந்த போட்டியில் சத நாயகன் இப்போட்டியில் டக் அவுட். ஹோல்டர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ரிஷப் பந்த் 92 ரன்களில் கேப்ரியல் வீசிய பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே கூடுதலாக எழும்ப பந்த் பஞ்ச் செய்ய முயன்றார் நன்றாக அடிக்கப்பட்ட ஷாட்தான். ஆனால் கவர்பாயிண்டில் ஹெட்மையர் பாய்ந்து பிடித்தார், பந்து வேகமாகச் சென்றதையடுத்து கொஞ்சம் தடுமாறினார் ஆனல் கடைசியில் இது ஒரு பிரமாதமான கேட்ச் ஆனது. 90களில் அவுட் ஆகும் கெட்டப்பழக்கத்துக்கு பந்த் ஆளாகி வருகிறாரோ என்ற ஐயம் எழுகிறது.

தற்போது அஸ்வின் 7 ரன்களுடனும் குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் ஆடிவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x