Published : 30 Oct 2018 03:38 PM
Last Updated : 30 Oct 2018 03:38 PM

சாமுவேல்ஸுக்கு ‘சென்ட் ஆப்’: கலீல் அகமதுவுக்கு ஐசிசி எச்சரிக்கை

மும்பையில் நேற்று நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் சாமுவேல்ஸை சென்ட் ஆப் செய்த இந்திய வீரர் கலீல் அகமதுவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எச்சரிக்கை விடுத்து, மைனஸ் புள்ளியும் வழங்கியுள்ளது.

மும்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் 14-வது ஓவரில் சாமுவேல்ஸின் விக்கெட்டை கலீல் அகமது எடுத்தார். கலீல் அகமது வீசிய பந்தை சாமுவேல்ஸ் (18 ரன்கள்) ஸ்லிப் திசையில் அடிக்க அது ரோஹித் சர்மாவின் கைகளில் தஞ்சமடைந்ததால் ஆட்டமிழந்தார். இதையடுத்து சாமுவேல்ஸ் களத்தில் இருந்து வெளியேறும்போது, கலீல் அகமது சென்ட் ஆப் செய்யும் விதமாக வெளியேறு என்று சைகை செய்தார்.

இந்தச் செயல் எதிரணி வீரர் சாமுவேல்ஸை வெறுப்பேற்றும் வகையில், கோபத்தை தூண்டும் வகையில் இருந்தது. இதைக் கண்காணித்த கள நடுவர்கள் இயான் களவுட், அனில் சவுத்ரி, 3-வது நடுவர் பால் வில்சன், 4-வது நடுவர் சி. சம்சுதீன் ஆகியோர் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, கலீல் அகமதுவின் செயலை ஆய்வு செய்த ஐசிசி போட்டி நடுவர் கலீல் அகமதுவுக்கு முறைப்படியான எச்சரிக்கையும், ஒரு மைனஸ் புள்ளியும் வழங்கினார்.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில், ''மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியின் போது, இந்திய பந்துவீச்சாளர் கலீல் அகமதுவின் செயல் ஐசிசி ஒழுங்குவிதிமுறை விதிகள் பிரிவு 2.5-ஐ மீறியதாகும். இதன்படி சர்வதேச போட்டியில் எதிரணி வீரரை வார்த்தைகளாலும், செயல்களாலும், உடல் அசைவுகளாலும் கோபமூட்டும் வகையில், ஆத்திரமூட்டும் வகையில் செய்வது குற்றமாகும். கலீல் அகமது சர்வதேசப் போட்டிக்கு புதியவர் என்பதால், அவருக்கு முதல்முறையாக எச்சரிக்கையும், ஒரு மைனஸ் புள்ளியும் வழங்கப்படுகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலீல் அகமதுவும் தான் செய்த தவறை, போட்டி நடுவர் கிறிஸ் பிராட் முன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து முறைப்படியான விசாரணை தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x