Last Updated : 26 Oct, 2018 05:18 PM

 

Published : 26 Oct 2018 05:18 PM
Last Updated : 26 Oct 2018 05:18 PM

வேறுவழியின்றி பும்ரா, புவனேஷ்வர் அழைக்கப்பட்டுள்ளனர்: நாங்கள் கொடுத்த நெருக்கடி வேலை செய்தது: மே.இ.தீவுகள் கோச் ஸ்டூவர்ட் லா சீண்டல்

இந்திய அணிக்கு கடந்த 2 போட்டிகளிலும் கடும் நெருக்கடி அளித்து, அனுபவம் மிக்கபந்துவீச்சாளர்கள் பும்ராவையும், புவனேஷ்குமாரையும் களமிறக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டோம் என்று மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா தெரிவித்துள்ளார்.

இந்திய, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. குவாஹாத்தி மற்றும் விசாகப்பட்டிணத்தில் நடந்த இரு போட்டிகளிலும் மே.இ.தீவுகள் அணி 300 ரன்களுக்கு மேல் குவித்தது. ஆனால், இந்திய அணிக்கு கடும் நெருக்கடி அளித்த மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியபோதிலும் 2-வது போட்டியை டை செய்தது.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமதுஷமி, உமேஷ் யாதவ், கலீல் அகமது ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு மேற்கிந்தியத்தீவுகள் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த வில்லை. மாறாக, இவர்கள் மூவரின் பந்துவீச்சை மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் நொறுக்கி எடுத்தனர்.

இதனால், அடுத்துவரும் 2 போட்டிகளில் வென்று தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருப்பதால், வேறு வழியின்றி அனுபவம் மிக்க பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் அடுத்த 3 போட்டிகளுக்கும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேற்கிந்திய்தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா மிபேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

கடந்த இரு போட்டிகளில் எங்கள் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் வேறுவழியின்றி இந்திய அணி பும்ராவையும், புவனேஷ்வர் குமாரையும் அழைத்து இருக்கிறது என்று நினைக்கிறேன். இதைத் தவிர வேறு காரணம் ஏதும் இருக்க முடியாது என்று நம்புகிறேன். இந்த நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது எங்களின் பேட்ஸ்மேன்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த உத்வேகத்தை நாங்கள் இழந்துவிடமாட்டோம்.

இந்திய வீரர்கள் தங்களுக்குள் கேள்விகளை கேட்கத் தொடங்கி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்குள் கேட்டுக்கொள்ள ஏராளமான கேள்விகளை இந்திய அணியினர் கொடுத்தனர். இப்போது, இந்த நிலையில்,நாங்கள் அந்தக் கேள்விகளுக்கு தகுந்த, போதுமான பதில்களுடன் இருக்கிறோம்.

 

விராட் கோலி திறமையான வீரர். அவரின் பேட்டிங்கை நான் மிகவும் ரசிக்கிறேன். எப்படியாவது இந்தியக் கேப்டன் தவறு செய்வார் என்றுதான் எதிர்பார்க்கிறேன். கடந்த போட்டியில் 44 ரன்கள் சேர்த்திருந்தபோது தவறு செய்தார், ஆனால், அதைப் பயன்படுத்திக்கொள்ள தவறினோம். கோலி கடினமான பயிற்சி எடுப்பதால், களத்தில் அவருக்கு அனைத்தும் எளிதாக இருக்கிறது. அவரை வீழ்த்தவும் திட்டம் வகுத்து வருகிறோம். அவரும் மனிதர்தானேன். எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது, அதை இறுக்கமாகப் பற்றிக்கொள்வோம்.

எங்கள் அணியின் ஹெட்மையர் மிகச்சிறப்பாகச் செயல்படுகிறார். அனுபவம் குறைந்த வீரராக இருந்தபோதிலும் 2-வது போட்டியில் ஷேய் ஹோப் அருமையான சதம் அடித்தார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது

இவ்வாறு ஸ்டூவர்ட் லா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x