Published : 16 Oct 2018 04:12 PM
Last Updated : 16 Oct 2018 04:12 PM
நடந்து முடிந்த ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் தொடக்க வீரர் கெய்ரன் போவெலுக்கு ரஹானே பிடித்த கேட்ச் மீது ஏகப்பட்ட சந்தேகம் இருந்தன, ஆனால் கேட்ச் தெளிவாகப் பிடித்ததற்கான தெளிவான வீடியோ ஆதாரம் இல்லாத நிலையில் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மெனுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவுட் என்று 3வது நடுவர் தீர்ப்பளித்தார்.
இது மே.இ.தீவுகளின் ஆஸ்திரேலியப் பயிற்சியாளரான ஸ்டூவர்ட் லாவுக்குப் பிடிக்கவில்லை, கடுமையான அதிருப்தியில் அவர் 3-வது நடுவர் அறைக்குச் சென்று அங்கு முறையற்ற விதத்தில் வசைபாடியுள்ளார். மேலும் 4வது நடுவர் இருப்பிடத்துக்கு வந்து வீரர்கள் முன்னிலையிலேயே முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
இதனையடுத்து நடுவர்களின் புகாரின் அடிப்படையில் ஸ்டூவர்ட் லா மீது விசாரணை மேற்கொண்ட ஐசிசி அவரை இந்தியாவுக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளுக்குத் தடை செய்தது, அவர் வீரர்கள் அறையைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
மேலும் ஸ்டூவர்ட் லா-வின் ஊதியத்தில் 100% அபராதமாக விதிக்கப்பட்டதோடு தகுதிநீக்கப் புள்ளிகளையும் பெற்றார் லா.
ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு எதிரான 2017ம் ஆண்டு போட்டியிலும் பயிற்சியாளர் லா முறைதவறி நடந்ததால் இந்த துர்நடத்தைக்கான தகுதியிழப்புப் புள்ளிகளும் சேர 2 ஒருநாள் போட்டிகளுக்குத் தற்போது தடை செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தொடர் மற்றும் வங்கதேசத் தொடரோடு மே.இ.தீவுகள் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஸ்டூவர்ட் லா, பிறகு இங்கிலாந்துக்குச் சென்று மிடில்செக்ஸ் அணிக்கு கோச் ஆகிறார். சந்திகா ஹதுரசிங்கா பால் டேம்பரிங் விவகாரத்தில் தடை செய்யப்பட்ட பிறகு தற்போது இன்னொரு கோச் தடை செய்யப்படுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT