Published : 27 Oct 2018 09:15 AM
Last Updated : 27 Oct 2018 09:15 AM

3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று நடைபெறுகிறது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையே 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்நடைபெற்று வருகிறது. குவாஹாட்டியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடைசி பந்தில் டை ஆனது. தொடரில் இந்திய அணி1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் 3-வது ஒருநாள் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

கடந்த இரு ஆட்டங்களிலும் மோசமாக பந்து வீசிய மொகமது ஷமி நீக்கப்பட்டு, முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இன்றைய ஆட்டத்தில் இவர்கள் களமிறங்குவதன் மூலம் அணியின் பந்து வீச்சு உத்வேகம் பெறும். பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி அதீத பார்மில்உள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ள விராட் கோலி, மீண்டும் ரன்வேட்டையாட ஆயத்தமாக உள்ளார். குவாஹாட்டியில் 140 ரன்களும், விசாகப்பட்டினத்தில் 157 ரன்களும் விளாசி ரன் இயந்திரமாக மாறியுள்ள அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். 4-வது இடத்தில் களமிறங்கும் அம்பதி ராயுடு விசாகப்பட்டினம் போட்டியில் 73 ரன்கள் சேர்த்ததன் மூலம் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இந்தத் தொடரில் அவர், மேலும் ரன்கள் குவிக்கும் பட்சத்தில் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் தனது இடத்தை வலுப்படுத்திக்கொள்ளக்கூடும். இதுஒருபுறம் இருக்க 5,6, 7-வது இடத்தில் களமிறங்கும் வீரர்கள் இந்தத் தொடரிலும் கேள்விக்குறியாகவே உள்ளனர். விசாகப்பட்டினத்தில் 5-வது வீரராக களமிறங்கிய தோனிக்கு, களத்தில் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். இதனால் அவர், மேலும் ஒரு முறை நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார். இதேபோல் இளம் வீரரான ரிஷப் பந்தும்எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறினார்.

விரைவாக ரன்கள் சேர்க்க முயன்று விசாகப்பட்டினம் போட்டியில் தனது விக்கெட்டை பறிகொடுத்த அவர், மீண்டும் ஒரு முறைவாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில்அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் சீனியர் வீரரான ரவீந்திர ஜடேஜா சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உலகக் கோப்பை தொடர் நெருங்கிவரும் வேளையில் ஜடேஜா உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே தனக்கான இடத்தை அணியில் வேரூன்றிக் கொள்ள முடியம் என்ற நெருக்கடியில் உள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிரடி வீரராக 21 வயதானசிம்ரன் ஹெட்மையர் உருவெடுத்துள்ளார். குவாஹாட்டி ஆட்டத்தில் 106 ரன்கள் விளாசிய அவர்,விசாகப்பட்டினத்தில் 94 ரன்கள்விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஷாய் ஹோப்பும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பவராக உள்ளார். விசாகப்பட்டினம் போட்டியில் சதம் விளாசிய அவர், அந்த ஆட்டத்தில் தோல்வியடையாமல் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை டையில் முடித்ததில் முக்கிய பங்காற்றினார்.

இன்றைய ஆட்டத்திலும் இவர்கள் இருவரும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி தரக்கூடும். இவர்களைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்களான கெய்ரன் பொவல், சந்தர்பால் ஹேம்ராஜ், ரூவன் பொவல், சீனியர் வீரர்களான மார்லோன் சாமுவேல்ஸ், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவர்களும் பேட்டிங்கில் வலுசேர்த்தால் இந்தியஅணிக்கு சவால் கொடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x