Published : 20 Oct 2018 12:56 PM
Last Updated : 20 Oct 2018 12:56 PM

‘இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன்’: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து பிரவீன் குமார் உருக்கம்

உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு இடையூறாக நான் இருந்துவிடக்கூடாது என்று உருக்கமாகக் கூறி இந்திய வீரர் பிரவீன் குமார் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்த பிரவீன் குமார். மிதவேகப்பந்துவீச்சாளரான பிரவீன் குமார் கடந்த 2007-ம் ஆண்டு, நவம்பர் 18-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். ஏறக்குறைய 5 ஆண்டுகள் வரை இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக பந்து வீசினார்.

கடந்த 2011-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தின் போது, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 106 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்தியது இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. லார்ட்ஸ் கிரிக்கெட் கிரிக்கெட் மைதானத்தில் மிகச்சிறந்த கவுரவம் அளிக்கப்பட்ட 18-வது வீரர் எனும் பெருமையை பிரவீன் குமார் பெற்றார்.

இந்திய அணிக்காக 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பிரவீன் குமார் 77 விக்கெட்டுகளையும், 292 ரன்களையும் சேர்த்துள்ளார். 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

உத்தரப் பிரதேச ரஞ்சி அணியில் கடந்த 2005-06 ஆம் ஆண்டு விளையாடிய பிரவீன் குமார் 41 விக்கெட்டுகளையும், 386 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். பந்துகளை ஸ்விங் செய்வதில் சிறப்பாக செயல்படும் பிரவீன் குமார் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், காயம் காரணமாக அவரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.

கடைசியாகக் கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் மாதம் 30-ம் தேதி தாக்காவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிதான் பிரவீன் குமார் இந்தியாவுக்காக விளையாடிய கடைசிப் போட்டியாகும். அதன்பின் இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.

ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளில் பங்கேற்று பிரவீன் குமார் விளையாடியுள்ளார். இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பிரவீன் குமார் திடீரென அறிவித்துள்ளார்.

32 வயதான பிரவீன் குமார் தனது ஓய்வு குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதில் எந்தவிதமான வருத்தமும் இல்லை. நான் முழுமனதோடு இதுவரை கிரிக்கெட் விளையாடிவிட்டேன். உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஏராளமான இளம் வீரர்கள், சிறந்த பந்துவீச்சாளர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தால், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். மற்ற வீரர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியம். என்னுடைய காலம் முடிந்துவிட்டது, அதை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்து விளையாடச் செய்த கடவுளுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

அதே சமயம், இதுதான் கிரிக்கெட்டில் இருந்து நான் விலகிக்கொள்ள சரியான தருணம். அதனால், கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் முடிவை எடுத்துவிட்டேன். எந்தவிதமான வெறுப்பாலும் எடுக்கவில்லை. அதிகமாகக் கொடுத்த இந்த கிரிக்கெட் எனக்குக் கொடுத்துவிட்டது, அதைவிட்டுச் செல்ல இது சரியான நேரம். என்னுடைய குடும்பம், பிசிசிஐ, உ.பி.கிரிக்கெட் அமைப்பு, ராஜீவ் சுக்லா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அடுத்து என்னுடைய வாழ்க்கையை பந்துவீச்சுப் பயிற்சியாளராக தொடரப் போகிறேன். இளம் பந்தவீச்சாளர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளேன்''.

இவ்வாறு பிரவீன் குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x