Published : 01 Aug 2014 10:00 AM
Last Updated : 01 Aug 2014 10:00 AM

நியூஸிலாந்தில் மேட்ச் பிக்ஸிங்கிற்கு 7 ஆண்டு சிறை

விளையாட்டுப் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங்கை தடுக்க நியூஸிலாந்தில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இந்த புதிய சட்டம் நியூஸிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆகியவை தொடங்குவதற்கு முன்னதாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்ச் பிக்ஸிங் தொடர்பான மசோதா, நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மசோசா நிறைவேறியது.

இது தொடர்பாக நியூஸிலாந்து விளையாட்டுத் துறை அமைச்சர் முர்ரே மெக்கல்லி கூறுகையில், “சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக மேட்ச் பிக்ஸிங் உருவெடுத்துள்ளது. அதனால் விளையாட்டின் வளர்ச்சி, மதிப்பு, நேர்மை ஆகியவற்றுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது நியூஸிலாந்திலும் மேட்ச் பிக்ஸிங் நடைபெற்றதைக் காண முடிகிறது” என்றார்.

நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் லோ வின்சென்ட் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அதேநேரத்தில் நியூஸிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டரான கிறிஸ் கெய்ன்ஸ் தன் மீதான மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். அது தொடர்பாக விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சம்பவங்களைத்தான் நியூஸிலாந்து விளையாட்டுத் துறை அமைச்சர் மறைமுக மாக சுட்டிக்காட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x