Published : 06 Oct 2018 08:53 AM
Last Updated : 06 Oct 2018 08:53 AM

ஐ லீக் கால்பந்து தொடரில் பங்கேற்கும் சென்னை சிட்டி அணியின் சீருடை அறிமுகம் 

ஐ லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் சீருடை கோவையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டிகள் வரும் 26-ம் தேதி முதல் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளன. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் பங்கேற்கும் சென்னை சிட்டி எஃப்சி (சிசிஎஃப்சி) அணியில் 10-க்கும் மேற்பட்ட தமிழக வீரர்கள் உள்ளனர். இந்த அணி 20 ஆட்டங்களில் பங்கேற்கிறது. இதில் 10 ஆட்டங்கள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகின்றன. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்த விளையாட்டுகளை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்நிலையில் சென்னை சிட்டி எஃப்சி அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சீருடைகளை அறிமுகம் செய்துவைத்தார். நிகழ்ச்சியில், சென்னை சிட்டி எஃப்சி அணியின் உரிமையாளர் ரோஹித் ரமேஷ், கோவை யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் திபேந்தர் சிங் சாந்தோக், இந்திய தொழிற் கூட்டமைப்பு (சிஐஐ) கோவை தலைவர் எம்.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, “கடந்த ஆண்டு சிசிஎஃப்சி அணி கோவை நேரு விளையாட்டு அரங்கில் தேசிய கால்பந்து போட்டிகளை நடத்தியது. இதற்காக சுமார் ரூ.4.50 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தியதுடன், இரு உயர்மின்கோபுர விளக்குகளையும் அமைத்தது.

இந்த மைதானத்தை சர்வதேச தரத்தில் பராமரித்து வருவது பாராட்டுக்குரியது. கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை அமைக்க, இரண்டு, மூன்று இடங்களைப் பரிசீலித்து வருகிறோம். விரைவில் இடத்தை தேர்வு செய்து, கிரிக் கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x