Last Updated : 20 Oct, 2018 09:04 AM

 

Published : 20 Oct 2018 09:04 AM
Last Updated : 20 Oct 2018 09:04 AM

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னையின் எப்சி ஹாட்ரிக் தோல்வி; 3-4 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியிடம் வீழ்ந்தது

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சென்னை நேரு விளையாட் டரங்கில் நேற்று முன்தினம் நடை பெற்ற இந்த ஆட்டத்தில் 5-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி வீரர் ரவுலின் போர்ஜஸ் சேம் சைடு கோல் அடித்தார்.

இனிகோ கால்டிரான் இடது புறத்தில் இருந்து அடித்த பந்தை கோல்கம்பத்துக்கு அருகே நின்ற எல் சபியா தலையால் முட்டி கோலாக்க முயற்சி செய்தார். அப்போது அருகில் நின்ற ரவுலின் போர்ஜஸ் மீது பந்து பட்டு கோலாக மாறியது. இதனால் சென்னை அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 15-வது நிமிடத்தில் சென்னை அணி 2-வது கோலை அடித்தது.

ஜெர்ரியிடம் இடது புறத்தில் இருந்து பந்தை பெற்ற இஸாக் வேகமாக முன்னேறிச் சென்று பாக்ஸ் பகுதிக் குள் நின்ற தோய் சிங்கிடம் கொடுக்க அவர், அதனை அற்புதமாக கோலாக மாற்றினார். இதன் பின்னர் கூடுதல் உத்வேகத்துடன் விளையாடிய சென்னை அணி 19 மற்றும் 22-வது நிமிடங்களில் கோல் அடித்தது. ஆனால் இந்த இரு கோல்களும் ஆப் சைடு என நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. 29-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி பதிலடி கொடுத்தது.சென்னை அணியின் வலுவில்லாத தடுப்பாட்டத்தை சரியாக பயன் படுத்திக் கொண்ட நார்த் ஈஸ் அணி வீரர் பார்த்தலோமிவ் ஓக்பேச் கோல் அடித்தார். முதலில் அந்த அணி வீரர் பெடரிகோ அடித்த ஷாட் இடது புறம் தடுக் கப்பட்டிருந்தது.

ஆனால் அடுத்த நொடியிலேயே சென்னை வீரர் எல் சபியா இருமுறை பந்தை விலக்கி விடத்தவறினார். இதன் விளைவாக சென்னை அணி இந்த கோலை வாங்கியிருந்தது. அடுத்த 3-வது நிமிடத்தில் சென்னை அணி தனது அடுத்த கோலை அடித்தது. இடது புறத்தில் இருந்து பந்தை பெற்ற ரபேல் அகஸ்டோ, எதிரணி வீரர் ஜோஸ் லியுடோவை கடந்து கோல்கம்பத்துக்கு அருகே நின்ற தோய் சிங்கிடம் வழங்க அவர், தனது குதிகாலால் கோல் அடிக்க சென்னை அணி 3-1 என்ற வலுவான நிலையை அடைந்தது. ஆனால் சென்னை அணியின் மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை.

மீண்டும் ஒரு முறை சென்னை அணியின் பலமில்லாத டிபன்ஸை சாதகமாக்கிக் கொண்டு 7 நிமிட இடைவெளியில் பார்த்தலோமிவ் ஓக்பேச் அடுத்தடுத்து இரு கோல் களை அடித்து மிரளச் செய்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சம நிலையை எட்டியது. பார்த்த லோமிவ் ஓக்பேச் தனது ஹாட்ரிக் கோலை 10 நிமிட இடைவெளியில் அடித்திருந்தார். ஐஎஸ்எல் வரலாற்றில் அதிவிரைவாக அடிக்கப்பட்ட 2-வது ஹாட்ரிக் கோலாக இது அமைந்தது.

2-வது பாதியின் தொடக்கத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி கூடுதல் உத்வேகத்துடன் விளை யாடியது. 54-வது நிமிடத்தில் அந்த அணி தனது 4-வது கோலை அடித்தது. சேம் சைடு கோலை அடித் திருந்த ரவுலின் போர்ஜஸ் இந்த கோலை அடித்து அணிக்கு 3-4 என்ற முன்னிலையை பெற்றுத்தந்தார். சென்னை அணி வீரர் மெயில்சன் ஆல்வ்ஸ் பந்தை கிளியர் செய் வதில் தவறிழைத்ததால் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரவுலின் போர்ஜஸ் கோல் அடித்து அசத்தினார். ஆட்டம் முடிவடைய 11 நிமிடங் கள் இருந்த நிலையில் சென்னை அணி ஜெஜெவை மாற்று வீரராக களமிறக்கியது.

கடைசி கட்ட நிமிடங்களில் இரு முறை கோல்கம்பத்துக்கு நெருக்கமாக சென்ற போதிலும் கோல் அடிக்கும் வாய்ப்புகளை சென்னை அணி தவறவிட்டது. முடிவில் சென்னை அணி 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. நடப்பு சாம்பிய னான சென்னை அணிக்கு இது ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடமும், 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடமும் தோல்வி கண்டிருந்த சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேவேளையில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 7 புள்ளிகளுடன் தற்போது பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா அணியை 1-0 என வீழ்த்தியிருந்த நார்த் ஈஸ்ட் அணி, கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தை 2-2 என டிரா செய்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x