

புதுடெல்லி: எதிர்வரும் 2026 பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர்தான் தான் பங்கேற்று விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர் என கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
“நிச்சயம் 2026 உலகக் கோப்பை தொடர் எனது கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கும். அடுத்த ஆண்டு நான் 41 வயதை எட்டுவேன். எனவே அதுதான் அதற்கான சிறந்த தருணம் என கருதுகிறேன்.
எனது ஆட்டத்தை பொறுத்தே என் ஓய்வு முடிவு இருக்கும். நான் விரைவில் ஓய்வு பெறுவேன். அது அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் இருக்கலாம். இதை நான் நேர்மையுடன் இங்கு பகிர்கிறேன்” என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
40 வயதான ரொனால்டோ, சர்வதேச மற்றும் கிளப் அணிகளுக்காக மொத்தமாக 950 கோல்களை பதிவு செய்துள்ளார். 5 முறை Ballon d’Or விருதை வென்றுள்ள அவர், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். கடந்த 2006 உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் அணி உடனான அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி தோல்வியடைந்தது.
அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோவில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதற்கு போர்ச்சுகல் அணி இன்னும் தகுதி பெறவில்லை. வியாழக்கிழமை அன்று அயர்லாந்து அணி உடனான தகுதி சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் வெற்றி பெற்றால் 2026 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும். கடந்த 2022 முதல் சவுதி அரேபியாவின் அல் நஸர் கிளப் அணிக்காக அவர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.