

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். 8 சுற்றுகளை கொண்ட இந்தத் தொடரில் முதல் 3 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. நேற்று ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 4-வது சுற்று இன்று நடைபெறுகிறது.
நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டு வரும் இந்தத் தொடரில் 4-வது சுற்றில் விளையாடுவதற்கு இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, பி.ஹரிகிருஷ்ணா, வி.பிரணவ், வி.கார்த்திக் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இன்று நடைபெறும் 4-வது சுற்றில் ஆர்.பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் டேனியல் துபோவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
அர்ஜூன் எரிகைசி, ஹங்கேரியின் பீட்டர் லேகோவுடன் மோதுகிறார். பி.ஹரிகிருஷ்ணா, சுவீடனின் நில்ஸ் கிராண்டேலியஸுடனும் வி.பிரணவ், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோவுடனும் வி.கார்த்திக், வியட்நாமின் லெ குவாங் லீமுடனும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.