Published : 15 Aug 2018 02:56 PM
Last Updated : 15 Aug 2018 02:56 PM

ஆங்கிலேய மண்ணில் வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள் போலும்: விராட் கோலி கருத்தைப் பகடி செய்து சந்தீப் பாட்டீல் கடும் சாடல்

இங்கிலாந்து தொடருக்குச் செல்வதற்கு முன்னால் அளித்த பேட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்தில் அணியின் திட்டமென்ன என்ற கேள்விக்கு, ‘கடந்த முறையும் என்னிடம் இப்படிக் கேட்டார்கள். நான் கூறினேன் அப்படியே நடந்து சென்று காபி அருந்துவேன் என்று, பயணம் செல்லும் போது என்னுடைய சிந்தனையே வேறு, அந்த நாட்டை முழுதும் மகிழ்வுடன் சுற்றி வருவேன்’ என்று பதிலளித்தார்.

தற்போது விராட் கோலியின் அந்தப் ‘பொறுப்பற்ற’ பேச்சை சந்தீப் பாட்டீல் கடும் கேலித்தொனியுடன் சாடியுள்ளார்.

பொதுவாக சந்தீப் பாட்டீல் அவ்வளவாக பொதுவெளியில் பேசாதவர், ஆனால் இந்த இந்திய அணியின் மேலான ‘ஹைப்’ சாரி ரொம்ப ஓவர் என்று தோன்றியதால்தான் பத்தியில் விட்டுக் கிழித்துள்ளார்.

தி குவிண்ட் என்ற ஊடகத்துக்கு சந்தீப் பாட்டீல் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:

முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது விராட் கோலி கூறிய கருத்தை வீரர்கள் உண்மையில் சீரியஸாக எடுத்துக் கொண்டது போல் தெரிகிறது. ஆங்கிலேய மண்ணில் நல்ல காபி அருந்தி மகிழ்கிறார்கள் போலும். ஒருவருக்கும் விமர்சனங்கள் பிடிப்பதில்லை, இவ்வளவு மோசமாக ஆடும் போத் விமர்சனங்களையும் தாங்க வேண்டும். உண்மை, எதார்த்தம், விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டும்.

எங்கள் காலக்கட்டத்தில் கிரிக்கெட்டைப் பார்க்க வேண்டும், வளர்ச்சியடைய வேண்டும், கடுமையாகப் பயிற்சி செய்ய வேண்டும் என்று எங்கள் தலைகளில் ஏற்றப்பட்டிருந்தது. மூத்த வீர்ர்களைப் பின்பற்றி அவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எங்களுக்குக் கூறப்பட்டது. இங்கிலாந்துக்கு பயணித்த மூத்த வீரர்களின் ஆலோசனைகளை கேட்பதற்குப் பதிலாக விராட் கோலியின் அணி அந்நாட்டின் காபியை அருந்தி மகிழ்கிறார்கள் போலும்.

உண்மையில் இங்கிலாந்துக்கு இதற்கு முன் பயணித்த கேப்டன்களான அஜித் வடேகர், சச்சின், சவுரவ் கங்குலி, அசாருதீன் ஆகியோர் விராட் கோலி போல் முக்கியமான தொடர் குறித்து இப்படிப் பொறுப்பற்ற கருத்துகளைக் கூறவில்லை.

என்னுடைய முதல் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஃபீஜி தீவுகள் பயணங்களை நினைத்துப் பார்க்கிறேன். அது நான்கரை மாதம் கொண்ட நீண்ட தொடர், ஆனால் எங்கள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அவரும் ஓய்வு எடுத்துக் கொள்ளவில்லை எங்களையும் ஓய்வு எடுக்க அனுமதித்ததில்லை. நான்கரை மாதங்களும் எங்கள் சிந்தனையெல்லாம் கிரிக்கெட்... கிரிக்கெட் என்பது மட்டும்தான். கிரிக்கெட்டைப் பேசினோம், கிரிக்கெட்டையே ஆடினோம்.

1982-ல் இங்கிலாந்துக்கு 2 மாத கிரிக்கெட் பயணத்திற்கும் சுனில் கவாஸ்கர் கேப்டன். அப்போதும் பிரேக் என்பதே கிடையாது. 1984 பாகிஸ்தான் தொடரும் ஒரு நீண்ட தொடர் யாரும் பிரேக் எடுத்துக் கொள்ளவில்லை. 1986-ல் கபில்தேவ் தலைமையிலான 2 மாதகால இங்கிலாந்து தொடரிலும் பிரேக் கிடையாது. விளைவு நாம் 2-0 என்று இங்கிலாந்தை வீழ்த்தினோம். நாங்கள் கிரிக்கெட் ஆடினோம், கிரிக்கெட்டை பயின்றோம், ஆனால் இப்போது கிரிக்கெட் ஆடுகிறார்கள் ஆனால் பயிற்சி இல்லை, இதன் விளைவுகள்தான் இப்போது நம் கண் முன் நிற்கிறது.

தற்போது சர்வதேச கிரிக்கெட் பயணங்கள் மிகவும் நெருக்கமாக உள்ளன. இன்று சர்வதேச கிரிக்கெட்டைத்தான் வீரர்கள் ஆடுகின்றனர், ஆனால் நாங்கள் 70களில் 80களில், 90களில் கிளப் கிரிக்கெட், அலுவலக கிரிக்கெட், உள்நாட்டு கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் ஆடினோம், ஆனால் பயிற்சியில் சமரசம் கிடையாது.

இது கிரேட் கவாஸ்கர், அமர்நாத், வெங்சர்க்கார், கபில் ஆகியோர் மட்டுமல்ல பின்னால் சச்சின், லஷ்மண், அசார், திராவிட், கும்ப்ளே ஆகியோருக்கும் பொருந்தும், சமரசமற்ற வீர்ர்கள் இவர்கள். கடந்த 4 பத்தாண்டுகளில் கிரிக்கெட் நிரம்ப மாறிவிட்டது. பயிற்சி இல்லையெனில் எதையும் சாதிக்க முடியாது. பேச்சைக் குறை, அதிகம் பயிற்சி செய், என்பதுதான் என் அறிவுரை.

இவ்வாறு அந்தப் பத்தியில் பொரிந்து தள்ளியுள்ளார் சந்தீப் பாட்டீல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x