

புதுடெல்லி: 31-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 23 முதல் 30 வரை மலேசியாவின் இபோ நகரில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், அனுபவம் வாய்ந்த நடுகள வீரரான மன்பிரீத் சிங், ஸ்டிரைக்கர் மன்தீப் சிங், கோல் கீப்பர்களான கிருஷ்ணன் பகதூர் பதக், சுராஜ் கார்கீரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் டிபன்டரான சஞ்சய் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் அனுபவம் வாய்ந்த் ஜுக்ராஜ் சிங், அமித் ரோஹிதாஸ் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த முன்கள வீரரான செல்வம் கார்த்திக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நவம்பர் 23-ல் கொரியாவுடன் மோதுகிறது.
அணி விவரம்: பவன், மோஹித் ஹொன்னஹள்ளி சசிகுமார் (கோல்கீப்பர்கள்), சந்துரா பாபி, நீலம் சஞ்சீப், யஷ்தீப் சிவாச், சஞ்சய், ஜுக்ராஜ் சிங், அமித் ரோஹிதாஸ் (டிபன்டர்கள்), ரஜிந்தர் சிங், ராஜ் குமார் பால், நீலகண்ட ஷர்மா, மொய்ரங்தெம் சிங், விவேக் சாகர் பிரசாத், முகமது ரஹீல் மவுசின் (நடுகள வீரர்கள்), சுக்ஜீத் சிங், ஷிலானந்த் லக்ரா, செல்வம் கார்த்தி, ஆதித்யா அர்ஜுன் லலாகே, தில்ப்ரீத் சிங், அபிஷேக் (முன்கள வீரர்கள்).