

சார்ப்ருக்கென்: ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் கால் இறுதியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா வெற்றி கண்டு அரை இறுதிக்கு முன்னேறினார்.
ஜெர்மனியின் சார்ப்ருக்கென் நகரில் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் கால் இறுதிப் போட்டியில் உன்னதி ஹூடா 22-20, 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே வீராங்கனை லின் சியாங் டியை வீழ்த்தினார். இதன்மூலம் அரை இறுதிச் சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார்.
ஆடவர் ஒற்றையர் கால் இறுதியில் அயர்லாந்து வீரர் நகாட் நுகெயன் 21-17, 14-21, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய வீரர் லக்சயா சென்னை வீழ்த்தினார். மற்றொரு ஆடவர் கால் இறுதிப் போட்டியில் பின்லாந்து வீரர் காலே கோலிஜோனன் 19-21, 21-12, 22-20 என்ற கணக்கில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டியைத் தோற்கடித்தார்.