Published : 15 Jul 2018 01:45 AM
Last Updated : 15 Jul 2018 01:45 AM
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 323 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளும் 2-வது ஒருநாள் போட்டியில் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 116 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் விளாசினார். இது அவருக்கு 12-வது சதமாக அமைந்தது. அவருக்கு உறுதுணையாக விளையாடிய மோர்கன் 51 பந்தில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் சேர்த்தார்.
இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது. கடைசி கட்டத்தில் டேவிட் வில்லி அதிரடியாக 50 ரன்கள் விளாசினார். இவர்களைத் தவிர ஜேசன் ராய் 40, ஜானி பேர்ஸ்டோவ் 38, பென் ஸ்டோக்ஸ் 5, ஜாஸ் பட்லர் 4, மொயின் அலி 13 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். கடந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய அவர் இம்முறை 10 ஓவர்களில் 68 ரன்களை வழங்கினார்.
இதையடுத்து 323 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் 15, ஷிகர் தவண் 30, ராகுல் 0 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர்.
விராட் கோலி 31, ரெய்னா 22 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT