Published : 30 Jun 2025 07:56 AM
Last Updated : 30 Jun 2025 07:56 AM
பர்மிங்ஹாம்: விக்கெட்களை வீழ்த்துவதற்கே நான் முன்னுரிமை அளித்து வருகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தெரிவித்தார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் ஜூலை 2-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரசித் கிருஷ்ணா.
பயிற்சியின் இடையே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில்தான் நான் அறிமுகமானேன். இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளேன். இங்கிலாந்து தொடர் சவாலானதாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு போதிய முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், முடிவு வேறு விதமாகிவிட்டது.
முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாகவே பந்துவீசினோம். ஆனால் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். முதல் இன்னிங்ஸில் சரியான லென்த்தில் என்னால் பந்து வீச இயலவில்லை. ஆனால் 2-வது இன்னிங்ஸின்போது சுதாரித்து பந்துவீசினேன். மேலும் ஆடுகளமும் சற்று மெதுவாக இருந்தது. இதனால் விக்கெட்களை எடுக்கமுடியும் என்று நம்பினேன். எதிர்பார்த்தபடி விக்கெட்களும் கிடைத்தன.
எப்போதும் விக்கெட்களை வீழ்த்துவதற்கே நான் முன்னுரிமை தருகிறேன். ஒவ்வொரு ஓவரை வீசும் போதும் அந்த ஓவரை மெய்டன் ஓவராக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறேன். அடுத்த 4 டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரீத் பும்ரா எத்தனை போட்டிகளில் விளையாடுவார் என்று தெரியவில்லை. அவரிடமிருந்து அதிகமாக நான் கற்றுக் கொண்டுள்ளேன். களத்திலும், பயிற்சியின்போதும் இளம் வீரர்களுக்கு அவர் அதிகப்படியான அறிவுரைகளை வழங்குவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT