Published : 22 Jun 2025 04:03 PM
Last Updated : 22 Jun 2025 04:03 PM
லீட்ஸ்: உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர் பும்ரா என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் பென் டக்கெட் கூறியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
“உலகின் தலைசிறந்த பவுலர் பும்ரா. அவரது பந்து வீச்சை எதிர்கொள்வது அவ்வளவு கடினமாக உள்ளது. எந்த மாதிரியான சூழலிலும் தனது ஆட்டத்திறன் மூலம் அவர் சிறந்து விளங்குகிறார். இந்தியாவின் தட்டையான ஆடுகளம் (பிளாட் பிட்ச்) மற்றும் இங்கிலாந்து என எங்கும் அவரது பந்து வீச்சு தரமாக உள்ளது. அவர் வீசும் பந்து இரண்டு பக்கமும் இங்கு ஸ்விங் ஆகிறது.
இருப்பினும் நாங்கள் சேதாரத்தை குறைத்துள்ளோம். இல்லையென்றால் நிலைமை மோசமாகி இருக்கும். அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். அவரைப் போன்ற ஒருவரை நீங்கள் அப்படியே பந்து வீச செய்து கடந்துவிட முடியாது. அவரை அழுத்தத்தில் வைக்க முயற்சிக்கலாம். மோசமான லைன் மற்றும் லெந்த்தில் வரும் பந்துகளை ஆடலாம்” என டக்கெட் கூறியுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு டக்கெட் மற்றும் ஆலி போப் இணைந்து 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த கூட்டணியை பும்ரா பிரித்தார். 94 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில் டக்கெட் விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். தற்போது மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT