Published : 03 Jun 2025 10:11 PM
Last Updated : 03 Jun 2025 10:11 PM
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார் விராட் கோலி. இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 122.86. இந்த சூழலில் அவரது இன்னிங்ஸை கண்டு ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தது.
விராட் கோலி நிதான ஆட்டம்: இறுதிப் போட்டியில் பிலிப் சால்ட் உடன் இணைந்து முதல் இன்னிங்ஸை ஆடிய விராட் கோலி, மொத்தம் 3 ஃபோர்கள் மட்டுமே விளாசினார். ஒற்றை மற்றும் இரட்டை இலக்க ஓட்டங்களை கோலி எடுத்தார். பவர்பிளே ஓவர்களில் 10 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே அவர் எடுத்தார்.
போட்டி நடைபெறும் ஆடுகளம் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க ஏதுவாக இருந்தும் கோலி நிதானமாக இன்னிங்ஸை ஆடியது பேசு பொருளாகி உள்ளது. ஆட்டத்தின் 15-வது ஓவரில் கோலி அவுட் ஆனார். ஆர்சிபி அணி அவருக்கு ஆங்கரிங் (Anchor) இன்னிங்ஸ் ஆடுமாறு பணித்திருக்கலாம் என ரசிகர்கள் சிலர் கூறியுள்ளனர்.
‘பந்தை ஷார்ட் லெந்த் மற்றும் நிதானமாகவும் விராட் கோலிக்கு பஞ்சாப் வீரர்கள் வீசினர். இந்த ஆடுகளத்தில் 35 பந்துகளை எதிர்கொண்ட பிறகு 123 ஸ்ட்ரைக் ரேட் என்பது ஏமாற்றம் தான்’ என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
ரசிகர்கள் விரக்தி: ‘டெஸ்ட் கிரிக்கெட் பாணியில் விராட் கோலி ஆடினார். கோலியின் மோசமான ஸ்ட்ரைக் ரேட்டால் மற்ற பேட்ஸ்மேன்களும் அழுத்தத்தை எதிர்கொண்டனர்’, ‘சுழற்பந்து வீச்சை விளாசுவது தான் ரஜத் பட்டிதாரின் டார்கெட். ஆனால், பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ், பட்டிதார் பேட் செய்த போது வேகப்பந்து வீச்சாளர்களை வீச செய்தார். அதை விராட் கோலி அதிரடியாக ஆடி இருக்க வேண்டும். ஆனால், அவர் சிங்கிள் எடுப்பதில் மகிழ்ச்சியாக உணர்ந்தார்’ என ரசிர்கர்கள் தங்கள் பதிவுகளில் கூறியுள்ளனர்.
13 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் என இருந்தது ஆர்சிபி. இருந்தும் 200 ரன்களை கூட அந்த அணி இந்த ஆட்டத்தில் எட்டவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT