Published : 17 Jul 2018 10:34 AM
Last Updated : 17 Jul 2018 10:34 AM

ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?- இங்கிலாந்து அணியுடன் இன்று பலப்பரீட்சை

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி டி 20 தொடரை சிறப்பாக விளையாடி 2-1 என்றக் கணக்கில் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற  இந்திய அணி, லார்ட்ஸ் மைதானத்

தில் நடை பெற்ற 2-வது போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ் மேன்களான ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விரைவில் ஆட்டமிழக்க நடுவரிசை வீரர்களான சுரேஷ் ரெய்னா, கே.எல்.ராகுல், தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி வெற்றியை தேடிக் கொடுக்கத் தவறினர்

அதிலும் தோனி 58 பந்துகளில் 37 ரன்கள் மட்டுமே சேர்த்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இக்கட்டான நேரத்தில் நிலைத்து நின்று பேட் செய்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைக்கும் திறமை கொண்ட தோனியின் மந்தமான பேட்டிங் ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் தோனி, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, நியூஸிலாந்து (இருமுறை), இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை (இரு முறை) ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இரு நாடு களுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இந்திய அணி கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்துக்கு எதிராகத் தோல்வி அடையாமல் இருந்து வருகிறது. இந்தப் பெருமையை தக்கவைத்து இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றுவதில் விராட் கோலி குழுவினர் தீவிர முனைப்பு காட்டக்கூடும்.

இதுஒருபுறம் இருக்க இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு எதிர் பார்த்த அளவுக்கு எதிரணிக்கு நெருக்கடி தரும் விதத்தில் அமையாதது பெரிய பின்னடைவாக மாறி உள்ளது. கடந்த போட்டியில் கடைசி 8 ஓவர்களில் சித்தார்த் கவுல், ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ் ஆகியோர்  சேர்ந்து கூட்டாக 82 ரன்களை வாரி வழங்கினர்.

ஏற்கெனவே ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவது இந்திய அணியின் பலவீனத்தை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.   சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ் முதல் ஆட்டத்தில் மிரளச் செய்தார். ஆனால் லார்ட்ஸ் போட்டியில் அவரது பந்துவீச்சையும் இங்கிலாந்து வீரர்

கள் பதம் பார்த்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. ஷர்துல் தாக்குர், அக்சர் படேல் ஆகியோர் அணிக்கு திரும்பக்கூடும். அல்லது கூடுதல் பேட்ஸ் மேனுடன் களமிறங்க இந்திய அணி முடிவு செய்தால் ஸ்ரேயஸ் ஐயர் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் ஆட்டம் கண்டு வருவதால், அதைச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு தற்போதே சிறப்பாகத் தயாராகத் தொடங்கியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக சுழற்சி முறையில் பல வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகின்றனர்.

கடந்த சில போட்டிகளாக ஃபார்மில் இல்லாத ஜோட் ரூட் சதம் அடித்து இயல்பான ஆட்டத்துக்குத் திரும்பியுள்ளார். பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், ஜாஸ் பட்லர், ஜேசன் ராய், மோர்கன் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். டி 20 தொடரை ஏற் கெனவே இழந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி ஆயத்தமாகி உள்ளது. ஒருநாள் போட்டித் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இன்றைய ஆட்டம் இருப்பதால் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்து காத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x