Published : 02 May 2025 08:15 PM
Last Updated : 02 May 2025 08:15 PM
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் 50 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் 20 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் அணிகளின் பிளே-ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.
நடப்பு சீசனில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளன. எஞ்சியுள்ள 8 அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்புக்கான ரேஸில் உள்ளன. இருந்தாலும் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கின்ற அணிகள் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
மும்பை இந்தியன்ஸ்: நடப்பு சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஆட்டங்களில் 7 வெற்றிகளை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒரு வெற்றி பெற்றால் கூட பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். அந்த அணி சிறந்த நெட் ரன் ரேட் கொண்டுள்ள காரணத்தால் டாப் 4 அணிகளில் ஒன்றாக இடம்பெறும் வாய்ப்பு உள்ளது.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: 10 ஆட்டங்களில் விளையாடி 14 புள்ளிகளை பெற்றுள்ளது ஆர்சிபி. அந்த அணி எஞ்சியுள்ள 4 ஆட்டங்களில் 3 வெற்றிகளை பெற்றால் 20 புள்ளிகளுடன் எந்த அணியையும் சார்ந்திருக்காமல் நேரடியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அப்படி இல்லாத சூழலில் மற்ற அணிகளை சார்ந்திருக்க வேண்டும். எப்படியும் ஆர்சிபி பிளே-ஆஃப் சுற்றுக்கும் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ்: 2014-ம் ஆண்டு சீசனுக்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த அணி விளையாட உள்ள கடைசி 4 ஆட்டங்களில் 3 வெற்றிகளை பெற்றால் எளிதில் பிளே-ஆஃப் சென்று விடும். அப்படி இல்லாத நிலையில் பிற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து அது முடிவாகும்.
குஜராத் டைட்டன்ஸ்: 9 ஆட்டங்களில் 6 வெற்றிகளை பெற்றுள்ளது குஜராத் அணி. அந்த அணிக்கு இன்னும் 5 ஆட்டங்கள் உள்ளன. அதில் மூன்றில் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் வாய்ப்பு சுலபம். மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளை பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு குஜராத் முன்னேறும்.
டெல்லி கேபிட்டல்ஸ்: இந்த சீசனின் தொடக்கத்தில் வெற்றிகளை குவித்தது டெல்லி அணி. இருப்பினும் கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் மூன்றில் தோல்வி கண்டுள்ளது. தற்போது புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள டெல்லி அணி, எஞ்சியுள்ள 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் நேரடியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். மூன்றில் வெற்றி பெற்றால் பிற அணிகளின் முடிவுகள் டெல்லிக்கு சாதகமாக அமைய வேண்டும்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் தற்போது 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற நிச்சயமாக 4 ஆட்டங்களிலும் வென்றாக வேண்டும். அதோடு ரன் ரேட், மற்ற அணிகளின் முடிவுகளும் லக்னோவுக்கு சாதகமாக அமைய வேண்டும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பத்து ஆட்டங்களில் 9 புள்ளிகள் பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 4 ஆட்டங்களில் கொல்கத்தா வெற்றி பெற்றாலும் 17 புள்ளிகள் வரை பெற முடியும். இருந்தாலும் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்தே கொல்கத்தாவின் பிளே-ஆஃப் வாய்ப்பு அமையும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: இந்த சீசனின் தொடக்கத்துக்கு முன்பாக ஹைதராபாத் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் சொல்லி இருந்தார். அந்த அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் 16 புள்ளிகள் பெற முடியும். ரன் ரேட் அடிப்படையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற 14 புள்ளிகள் போதும். இருப்பினும் பிற அணிகளின் முடிவை பொறுத்தே அது அமையும். இருப்பினும் எஞ்சியுள்ள ஆட்டங்களில் இரண்டு தோல்வியை தழுவினாலும் ஹைதராபாத் முதல் சுற்றோடு வெளியேற வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT