Published : 10 Apr 2025 06:16 AM
Last Updated : 10 Apr 2025 06:16 AM
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. நடப்பு சீசனில் சிஎஸ்கேவின் 4-வது தோல்வியாக இது அமைந்தது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 220 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. எனினும் கடைசி வரை வெற்றிக்காக சிஸ்கே போராடிய விதம் பாராட்டும் வகையில் இருந்தது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றியை தவறவிட்டது என்றே கூறவேண்டும். மோசமான பீல்டிங் மற்றும் இலக்கை துரத்திய போது இறுதிப்பகுதியில் தொடர்ச்சியாக 24 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்காததும் தோல்விக்கு வித்திட்டது என்றே கூறலாம்.
42 பந்துகளில், 7 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் விளாசிய பஞ்சாப் அணியின் இளம் தொடக்க வீரரான பிரியன்ஷ் ஆர்யா, ஆட்டத்தின் 2-வது பந்தில் கொடுத்த கேட்ச்சை கலீல் அகமது தவறவிட்டார். இதன் பின்னர் அஸ்வின் வீசிய 11-வது ஓவரின் 2-வது பந்தை எல்லைக்கோட்டுக்கு அருகே நின்ற முகேஷ் சவுத்ரி கேட்ச் செய்தார். ஆனால் அவர், எல்லைக்கோட்டை மிதித்துவிட்டார். அப்போது ஆர்யா 73 ரன்களில் இருந்தார். இந்த இரு வாய்ப்புகளையும் அவர், அற்புதமாக பயன்படுத்தி மிரட்டிவிட்டார்.
இதேபோன்று 36 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசிய ஷஷாங் சிங் கொடுத்த கேட்ச்சையும் சிஎஸ்கே கோட்டைவிட்டது. நூர் அகமது வீசிய 17-வது ஓவரின் 4-வது பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் ஷஷாங் விளாசினார். அப்போது எளிதாக வந்த கேட்ச்சை ரச்சின் ரவீந்திரா தவறவிட்டார். அப்போது ஷஷாங் 32 ரன்கள் எடுத்திருந்தார். இவற்றை தவிர்த்து மார்கஸ் ஸ்டாயினிஸ் கொடுத்த சற்று கடினமான கேட்ச்சை விஜய் சங்கர் கோட்டை விட்டிருந்தார்.
எனினும் ஸ்டாயினிஸ் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் 4 ரன்களிலேயே நடையை கட்டினார். ஆர்யா, ஷஷாங் சிங் ஆகியோரது கேட்ச்சை தவறவிட்டதற்கான பலனை சிஎஸ்கே அனுபவித்தது. இவர்கள் இருவரும் கொடுத்த கேட்ச்சை சிந்தாமல் சிதறாமல் எடுத்திருந்தால் பஞ்சாப் அணியை குறைந்த ரன்களில் மட்டுப்படுத்தியிருக்கலாம். ஏனெனில் அந்த அணி 8 ஓவர்களில் 83 ரன்களை சேர்த்திருந்த போதிலும் 5 விக்கெட்களை இழந்திருந்தது.
பேட்டிங்கில் பெரிய இலக்கை துரத்திய நிலையில் சிஎஸ்கே அணி 13.5-வது ஓவரில் இருந்து 17.4-வது ஓவர் வரை மொத்தம் 24 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. 13.4-வது ஓவரில் ஷிவம் துபே சிக்ஸர் விளாசினார். அதன் பின்னர் அடுத்த இரு பந்துகளில் 2 ரன்களே எடுக்கப்பட்டன. தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் வீசிய 15-வது ஓவரில் 5 ரன்களும், லாக்கி பெர்குசன் வீசிய அடுத்த ஓவரில் 7 ரன்களும், யுவேந்திர சாஹல் வீசிய 17-வது ஓவரில் 9 ரன்களும் எடுக்கப்பட்டன. இந்த 3 ஓவர்களிலும் ஒரு பவுண்டரியை கூட சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அடிக்க முடியாமல் போனது.
லாக்கி பெர்குசன் வீசிய 18-வது ஓவரின் கடைசி இரு பந்துகளை தோனி சிக்ஸருக்கு விளாசி வறட்சியை போக்கியிருந்தார். பந்துகள் கணக்கீட்டின்படி சுமார் 4 ஓவர்களில் சிஎஸ்கே ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் போனது தேவைப்படும் ரன்ரேட்டை அதிகரிக்கச் செய்து இறுதிப் பகுதியில் அழுத்தத்தை கூட்டியது. இதற்கு காரணம் அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன் ஆகியோர் 15 மற்றும் 16-வது ஓவரை கச்சிதமாக வீசியதுதான். அவர்கள் ஆஃப் ஸ்டெம்புகளுக்கு வெளியே வீசி அழுத்தம் கொடுத்தனர். மேலும் ஷிவம் துபே ஆட்டமிழந்த பிறகு யுவேந்திர சாஹலை 17-வது ஓவரை வீசச் செய்து சிஎஸ்கேவின் நெருக்கடியை அதிகரிக்கச் செய்தார் ஸ்ரேயஸ் ஐயர்.
இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வி அடைந்த போதிலும் சில நேர்மறையான விஷயங்கள் நிகழ்ந்துள்ளன. டாப் ஆர்டர் பேட்டிங் பார்முக்கு திரும்பி உள்ளது. நடப்பு சீசனில் முதன்முறையாக பவர்பிளேவில் விக்கெட்டை இழக்காமல் 59 ரன்கள் விளாசப்பட்டது. டேவன் கான்வே (69), ரச்சின் ரவீந்திரா (36), ஷிவம் துபே (42) அதிரடி பாதைக்கு திரும்பி உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக தோனி 12 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்கள் விளாசியதும் கவனம் பெற்றுள்ளது.
பேட்டிங் வரிசையில் 5-வது வீரராக உள்ள வந்த அவர், தாக்குதல் ஆட்டம் மேற்கொண்ட விதம் எதிரணிக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் இருந்தது. யாஷ் தாக்குர் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட போதிலும் தோனி இருந்த வரை பஞ்சாப் அணிக்கு ஒருவித பதற்றம் இருந்தது. இந்த ஓவரின் முதல் பந்தில் தோனி ஆட்டமிழந்த பின்னரே பஞ்சாப் அணி நிம்மதிப் பெருமூச்சுவிட்டது.
இந்த சீசனில் இதற்கு முன்னர் தோல்வி அடைந்த ஆட்டங்களில் சிஎஸ்கே அணி எந்தவித போராட்ட குணத்தையும் வெளிப்படுத்தாமல் மெத்தன போக்குடன் செயல்பட்டிருந்தது. ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வியில் இந்த நிலைமை தலைகீழாக இருந்தது. பழைய சிஎஸ்கே அணியை கண்முன் கொண்டுவந்தது. இந்த உத்வேகமும், போராட்ட குணமும் வரும் ஆட்டங்களிலும் சிஎஸ்கேவிடம் இருந்து வெளிப்பட்டால் வெற்றிப் பாதைக்கு அணி திரும்பவது சாத்தியப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT