Published : 08 Apr 2025 06:40 AM
Last Updated : 08 Apr 2025 06:40 AM
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் உள்ள முலான்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த சீசனை மும்பை அணிக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே அதன் பின்னர் நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. இந்த 3 ஆட்டங்களிலுமே அந்த அணி இலக்கை துரத்தி வீழ்ந்துள்ளது. தோல்வி அடைந்த 3 ஆட்டங்களில் இரண்டை சிஎஸ்கே, சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியிருந்தது.
180 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலே சிஎஸ்கே அணி அதை எட்டிப்பிடிப்பது என்பது எட்டாக்கனியாக மாறி உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிராக197 ரன்கள், ராஜஸ்தான்அணிக்கு எதிராக 183 ரன்கள், டெல்லி அணிக்கு எதிராக 184 ரன்கள் இலக்கை விரட்ட முடியாமல் தவித்தது சிஎஸ்கே அணி. இதில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தை தவிர்த்து மற்ற 2 ஆட்டங்களிலும் இலக்கை துரத்தும் போது சிஎஸ்கேவிடம் இருந்து எந்தவித போராட்ட குணமும் வெளிப்படாதது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
வெற்றிக்கான அணிச் சேர்க்கையை கண்டறிவதே சிஎஸ்கேவுக்கு பெரிய இலக்காக மாறி உள்ளது. ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஜேமி ஓவர்டன், சேம் கரண் ஆகியோரை நீக்கிவிட்டு டேவன் கான்வே, முகேஷ் சவுத்ரி, விஜய் சங்கர் ஆகியோரை பயன்படுத்திய போதிலும் சிஎஸ்கே அணியால் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியவில்லை. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரது நிலையற்ற பேட்டிங்கும் கவலையளிக்கும் வகையில் உள்ளது.
பேட்டிங்கில் பவர்பிளேவில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளாதது, பந்து வீச்சில் பவர்பிளேவில் எதிரணியை கட்டுப்படுத்த முடியாதது ஆகியவை ஆட்டத்துக்கு ஆட்டம் பலவீனமாகி வருகிறது. மேலும் கேப்டன் ருதுராஜ் களவியூகங்களை அமைப்பதிலும் தடுமாற்றம் அடைவது அணியின் பலவீனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
சுழற்பந்து வீச்சாளர்களை எந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர், குழப்பம் அடைந்துள்ளதாக தெரிகிறது. இது ஒருபுறம் இருக்க சுழற்பந்து வீச்சில் நூர் அகமது மட்டுமே நம்பிக்கை அளிக்கக்கூடியவராக உள்ளார். சீனியர் வீரர்களான ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரிடம் இருந்து எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் இதுவரை வெளிப்படவில்லை.
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் கலீல் அகமது தொடக்க ஓவர்களில் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் அவருக்கு உறுதுணையாக வீசுவதற்கு வலுவான வேகப்பந்து வீச்சாளர் இல்லை. மதீஷா பதிரனா நடுஓவர்களிலும், இறுதிக்கட்ட ஓவர்களிலும் சிறப்பாக செயல்பட்டாலும் அதற்கான பலன் இல்லாமல் உள்ளது. பேட்டிங், பந்து வீச்சு பலவீனங்கள் இருக்கும் வேளையில் சிஎஸ்கேவின் பீல்டிங் திறனும் மங்கத் தொடங்கியுள்ளது. நடப்பு சீசனில் 4 ஆட்டங்களில் அந்த அணி 7 கேட்ச்களை தவறவிட்டுள்ளது. மற்ற எந்த அணிகளும் இவ்வளவு அதிகமான கேட்ச்களை கோட்டைவிடவில்லை.
பேட்டிங்கில் கடந்த சீசனில் காயத்துடன் விளையாடிய தோனி கடைசி 2 ஓவர்களில் மட்டும் களமிறங்கிய தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு பலம் சேர்த்தார். ஆனால் 43 வயதாகும் அவர், இந்த சீசனில் ராஜஸ்தான், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிக பந்துகளை எதிர்கொண்ட போதிலும் வெற்றிக்கான பங்களிப்பை வழங்கவில்லை. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 11-வது ஓவரில் களமிறங்கினார். அப்போது அணியின் வெற்றிக்கு 56 பந்துகளில் 110 ரன்கள் தேவையாக இருந்தது.
நவீனகால தொழிற்முறை டி 20 போட்டிகளில் இந்த ரன்கள் சேர்க்கக்கூடியதுதான். ஆனால் தோனியும், விஜய் சங்கரும் விளையாடிய விதம் வெற்றிக்கான வேட்கை இல்லாதது போன்றே இருந்தது.
சிஎஸ்கே அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டுமானால் அணியின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டும். மேலும் தோனியை கடந்து சிந்திக்க வேண்டிய கட்டத்துக்கும் சிஎஸ்கே தள்ளப்பட்டுள்ளது.
தற்போது சிஎஸ்கே 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இன்னும் 10 ஆட்டங்களே மீதம் உள்ளன. இங்கிருந்து பாய்ச்சல் எடுக்க வேண்டுமென்றால் சிஎஸ்கே புத்துணர்ச்சியுடனும், கூடுதல் உத்வேகத்துடனும் செயல்பட வேண்டும். இன்றைய ஆட்டத்தில் அநேகமாக கமலேஷ் நாகர்கோட்டி, அன்ஷுல் கம்போஜ், ஸ்யேரஷ் கோபால் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 2 வெற்றிகளை பெற்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் தோல்வியை எதிர்கொண்டது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு தோல்வி, 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக 206 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் சரிவை சந்தித்திருந்தது.
முதல் இரு ஆட்டங்களிலும் 13 சிக்ஸர்களை விளாசிய ஸ்ரேயஸ் ஐயர் 10 ரன்களில் நடையை கட்டியிருந்தார். இதேபோன்று பிரியன்ஷு ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோரும் விரைவிலேயே வெளியேறியிருந்தனர். நேஹல் வதேரோ 41 பந்துகளில் 62 ரன்கள் விளாசிய போதும் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் மீண்டும் மட்டையை சுழற்றுவதில் கவனம் செலுத்தக்கூடும். வேகப்பந்து வீச்சில் மார்கோ யான்சன், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன் ஆகியோர் சிஎஸ்கே பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி தரக்கூடும். சுழலில் யுவேந்திர சாஹல், கிளென் மேக்ஸ் வெல் நம்பிக்கை அளிக்கக்கூடும்.
தோனியும்.. சாஹலும்: சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் லெக் ஸ்பின்னரான யுவேந்திர சாஹல் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். தோனிக்கு எதிராக யுவேந்திர சாஹல் இதுவரை ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளில் 10 ஆட்டங்களில் நேருக்குநேர் விளையாடி உள்ளார். இதில் 5 முறை தோனியை, யுவேந்திர சாஹல் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
‘அஸ்வின் ட்விஸ்ட்’- சிஎஸ்கே அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். இதில் அவர், கிரிக்கெட் தொடர்பான சுவாரஸ்யமான விஷயங்களை கூறுவது வழக்கம். சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் உள்ளிட்டவை குறித்தும் வீரர்கள்,அணிகளின் பலம், பலவீனங்கள் குறித்தும் கூறுவது உண்டு. இந்நிலையில் அவரது சேனலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பங்கேற்ற விருந்தினர்கள் சிலர், சிஎஸ்கே அணி குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.
இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் அஸ்வின் தனது சேனலில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், இனிமேல் சிஎஸ்கே அணி தொடர்பான போட்டிக்கு முந்தைய கண்ணோட்டமும், பிந்தைய பகுப்பாய்வும் இடம் பெறாது என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT