மார்ச் 29-ல் ஐஎஸ்எல் பிளே ஆஃப் சுற்று

மும்பை சிட்டி எஃப்சி அணி
மும்பை சிட்டி எஃப்சி அணி
Updated on
1 min read

மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 13 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் லீக் சுற்றின் முடிவில் மோகன் பகான் எஸ்ஜி, எஃப்சி கோவா, பெங்களூரு எஃப்சி, நார்த்ஈஸ்ட் யுனைட்டெடு எஃப்சி, ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி எஃப்சி ஆகிய 6 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன.

இதில் மோகன் பகான் அணி லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்து ஷீல்டை வென்றிருந்தது. இந்நிலையில் பிளே ஆஃப் சுற்று அட்டவணையை போட்டி அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதன்படி நாக் அவுட் போட்டி வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறுகிறது. தொடர்ந்து இறுதிப் போட்டி ஏப்பரல் 2 முதல் 7-ம் தேதி வரை நடைபெறுகின்றது.

லீக் சுற்றில் 3 முதல் 6-வது இடத்தை பிடித்திருந்த பெங்களூரு எஃப்சி, நார்த்ஈஸ்ட் யுனைட்டெடு எஃப்சி, ஜாம்ஷெட்பூர் எஃப்சி, மும்பை சிட்டி எஃப்சி ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றில் மல்லுக்கட்ட உள்ளன. முதல் இரு இடங்களை பிடித்த மோகன் பகான், கோவா அணிகள் நேரடியாக அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன.

பிளே ஆஃப் சுற்றில் 29-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் மோதுகின்றன. 30-ம் தேதி குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு - ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரை இறுதி சுற்றில் மோகன் பகான், கோவா அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தும். அரை இறுதி சுற்று ஏப்ரல் 2, 3, 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெறுகிறது. அரை இறுதி ஆட்டங்கள் உள்ளூர் மைதானம், எதிரணியின் மைதானம் என்ற அடிப்படையில் நடைபெறும். அரை இறுதியில் வெற்றி பெறும் அணிகள் ஏப்ரல் 12-ம் தேதி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in