Published : 02 Mar 2025 08:12 AM
Last Updated : 02 Mar 2025 08:12 AM
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று கராச்சியில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 37, ஜோப்ரா ஆர்ச்சர் 25, பென் டக்கெட் 24, கேப்டன் ஜாஸ் பட்லர் 21, ஹாரி புரூக் 19, ஜேமி ஓவர்டன் 11 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் மார்கோ யான்சன், வியான் முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். கேசவ் மகாராஜ் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி குறைந்தது 207 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாமல் மட்டுமே இதே பிரிவில் 3 புள்ளிகளுடன் உள்ள ஆப்கானிஸ்தான் அணி நிகர ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி இலக்கை துரத்துவதற்கு முன்னதாகவே அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
180 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 29.1 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஸி வான்டர் டஸ்ஸன் 87 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 72 ரன்களும் ஹென்ரிச் கிளாசன் 56 பந்துகளில், 11பவுண்டரிகளுடன் 64 ரன்களும் விளாசினர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0, ரியான் ரிக்கெல்டன் 27 ரன்களில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தனர்.
7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியிருந்தது. ஆஸ்திரேலியாவுடன் மோத இருந்த 2-வது ஆட்டம் மழை காரணமாக ரத்தாகியிருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 5 புள்ளிகளுடன் லீக் சுற்றில் தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT