

கோலாலம்பூர்: 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் குரூப்-1 ஆட்டத்தில் இந்தியாவும், வங்கதேச அணியும் மோதின.
இதில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு வெறும் 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜனாதுல் மவோ 14 ரன்களும், சுமையா அக்தர் 21 ரன்களும் எடுத்தனர். மற்ற அனைத்து வீராங்கனைகளும் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் வைஷ்ணவி சர்மா 3, ஷப்னம் ஷகில், வி.ஜே. தோஷிதா, கோங்கடி திரிஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். பின்னர் விளையாடிய இந்திய அணி 7.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. கோங்கடி திரிஷா 40, கமாலினி 3 ரன்கள் சேர்த்து வீழ்ந்தனர். சனிகா சால்கே 11, கேப்டன் நிக்கி பிரசாத் 5 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி கண்டது. 3 விக்கெட்களை வீழ்த்திய வைஷ்ணவி சர்மா ஆட்ட நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்திய மகளிர் அணி, தனது அடுத்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை வரும் 28-ம் தேதி சந்திக்கவுள்ளது.