Published : 05 Jul 2018 08:56 AM
Last Updated : 05 Jul 2018 08:56 AM
இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதை இந்தியா நிறுத்திவிட்டது. ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது.
இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்த பேச்சுவார்தைத தொடங்குவதற்கு இதுவே சரியான நேரம் என்று ஜாவித் மியான்தத் கூறியுள்ளார்.
நேற்று அவர் கராச்சியில் கூறும்போது, “இரு நாடுகளிடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்தி பல ஆண்டுகளாகி விட்டன. இந்த நிலையில் மீண்டும் போட்டிகளை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் (பிசிபி) பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும். அதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன். இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதாமல், உலக டெஸ்ட் போட்டியையும், வேறு போட்டிகளையும் நடத்தி பயனில்லை.
இரு நாடுகள் இடையே கிரிக்கெட் விளையாடத் தொடங்கும்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே நட்புறவு ஏற்பட வாய்ப்புள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT