Published : 12 Jul 2018 08:29 AM
Last Updated : 12 Jul 2018 08:29 AM
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 போட்டியில் வெளிமாநில வீரர்கள் யாரும் விளையாடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிஎன்பிஎல்-ல் வெளிமாநில வீரர்கள் 2 பேர் விளையாட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்(டிஎன்சிஏ) அனுமதி அளித்தது. இந்த நிலையில் டிஎன்பிஎல்-ல் வெளிமாநில வீரர்கள் விளையாட அனுமதிக்கக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகித்து வரும் நிர்வாகிகள் கமிட்டி (சிஓஏ) அறிவித்தது.
இதுதொடர்பாக சிஓஏ, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. டிஎன்பிஎல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் கூறும்போது, இந்தப் போட்டியில் வெளிமாநில வீரர்கள் விளையாட தாங்கள் சார்ந்த மாநில கிரிக்கெட் சங்கங்களில் இருந்து ஆட்சேபம் இல்லாத சான்றிதழை(என்ஓசி) பெற்றுள்ளனர். எனவே அவர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என்றார். ஆனால் பிசிசிஐ விதிகளின்படி வெளிமாநில வீரர்கள் இதில் விளையாட அனுமதி இல்லை. எனவே இதை ஏற்கக்கூடாது என்று சிஏஓ தரப்பில் மூத்த வழக்கறிஞர் பரக் திரிபாதி எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து டிஎன்பிஎல் போட்டிகளில் வெளிமாநில வீரர்கள் விளையாடுவதற்கு அனுமதி இல்லை. இருந்தபோதும் டிஎன்பிஎல் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்திக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் உத்தரவைப் பிறப்பித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT