

பெங்களூரு: மிக முக்கிய போட்டிகளில் தொடர்ந்து சோபிக்க தவறி வருகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல். இந்நிலையில், அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
32 வயதான கே.எல்.ராகுல், கடந்த 2014 முதல் இந்திய அணியில் விளையாடி வருகிறார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று பார்மெட்டுகளிலும் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடுகிறார். ஓப்பனிங், மிடில் ஆர்டர் என பேட்டிங் ஆர்டரில் வெவ்வேறு இடங்களில் ஆடும் திறன் கொண்டவர். இருப்பினும் நெருக்கடியான தருணங்களில் அவர் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்த தடுமாறுகிறார்.
தற்போது நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அது நடந்துள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 0, இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 150 ரன்களில் சர்பராஸ் கான் ஆட்டமிழந்தார். அப்போது களத்துக்கு வந்தார் ராகுல். அவரிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து 99 ரன்களில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். அவரை பின் தொடர்ந்து 12 ரன்களில் வில்லியம் ஓ’ரூர்கி பந்தில் வெளியேறினார்.
சுமார் 7 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் அணியில் ராகுல் இடம்பிடித்தார். வங்கதேச அணிக்கு எதிராக சென்னை டெஸ்ட் போட்டியில் 16 மற்றும் 22 ரன்கள் எடுத்தார். கான்பூரில் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் பதிவு செய்தார். இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பினை வழங்கி வருகிறது.
இருப்பினும் அவரை ஆடும் லெவனில் இருந்து டிராப் செய்ய வேண்டும் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பெங்களூரு டெஸ்ட் போட்டியில் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து விரட்டி வருகிறது.