மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

“கடந்த 3 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை” - இந்திய மகளிர் அணியை விமர்சித்த மிதாலி ராஜ்

Published on

புதுடெல்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி எந்த வளர்ச்சியும் காணவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து மிதாலி ராஜ் கூறியது:

“ஐக்கிய அரபு அமீரகத்தின் மெதுவான ஆடுகள சூழலுக்கு ஏற்ற வகையில் இந்திய அணி தொடரில் விளையாடவில்லை. பேட்டிங் யூனிட்டில் யாருக்கு எந்த ரோல் என்ற புரிதல் இல்லாமல் ஆடினர். பீல்டிங் தரமாக இல்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் நாம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், இறுதி வரை சென்று தோல்வியை தழுவினோம்.

கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக அணியில் எந்த வளர்ச்சியையும் நான் பார்க்கவில்லை. சிறந்த அணியை வீழ்த்துவது முக்கியம். ஆனால், மற்ற அணிகளை வீழ்த்தி நாம் நிறைவு பெற்றது போல உணர்கிறோம். மற்ற அணிகள் வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.

லோயர் மிடில் ஆர்டரில் முன்னேற்றம் இல்லை. அந்த இடத்தில் பலரை நாம் முயற்சித்து பார்த்திருக்க வேண்டும். அதையும் செய்ய தவறினோம். ஆடவர் அணியில் அதை செய்து பலன் அடைந்துள்ளனர். தேர்வாளர்கள் கேப்டனை மாற்ற வேண்டும் என நினைத்தால் இளம் வீராங்கனை எனது சாய்ஸ். ஸ்மிருதி, ஜெமிமா போன்றவர்கள் அணியில் உள்ளனர். ஸ்மிருதி, நீண்ட காலமாக துணை கேப்டனாக உள்ளது கவனிக்கத்தக்கது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in