Last Updated : 15 Jun, 2018 06:26 PM

 

Published : 15 Jun 2018 06:26 PM
Last Updated : 15 Jun 2018 06:26 PM

ஐஸ்லாந்தைக் கண்டு நடுக்கத்தில் அர்ஜெண்டினா? மெஸ்ஸி மேஜிக்கை எதிர்நோக்கும் ரசிகர்கள்

சனிக்கிழமை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஐஸ்லாந்து அணியை உலகக்கோப்பைக் கால்பந்தில் அர்ஜெண்டினா எதிர்கொள்கிறது. ஐஸ்லாந்து அணிக்கு ‘ஜெயண்ட் கில்லர்’ என்ற பெயர் ஏற்கெனவே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுக்கு அர்ஜெண்டினா அணி குறிப்பிடும்படியான பார்ம் இன்மை, காயங்கள், சர்ச்சைகளுடன் வந்துள்ளது. ஆனால் கடந்த உலகக்கோப்பையின் போது வருத்தத்துடன் ஓய்வு அறிவித்த மெஸ்ஸி பிறகு மனது மாறி இம்முறை கோப்பையை வெல்லும் உறுதியுடன் வந்துள்ளது ஐஸ்லாந்துக்கு நல்ல செய்தி கிடையாது.

ஆனால் ஐஸ்லாந்து அணி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று ஆடும் அணி, அம்மாதிரி அணிகள் எப்போதும் பெரிய அணிகளுக்கு ஆபத்தானவை, மாஸ்கோ ஸ்பார்ட்டக் மைதானத்தில் நாளை இந்த பரபரப்பான ஆட்டம் நடைபெறுகிறது.

ஐரோப்பியக் கால்பந்தாட்டத்தில் ஐஸ்லாந்து எந்த அணிக்கு எதிராகவும் சரிசமமாக மோத முடியும் என்பதை நிரூபித்தது.

2014 உலகக்கோப்பை இறுதியில் ஜெர்மனியிடம் தோல்வி அடைந்த அர்ஜெண்டினா, அதன் பிறகு கோபா அமெரிக்காவில் சிலி அணியிடம் அடுத்தடுத்த தோல்விகளில் இழந்தது.

அர்ஜெண்டின அணி தனிநபர் திறமைகளை நம்பியுள்ள வேளையில் ஐஸ்லாந்து அணியாகத் திரண்டு ஒற்றுமையுடன் ஆடுவதில் தன் பலத்தை வைத்துள்ளது.

யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்தில் கடந்த முறை ஐஸ்லாந்து கிறிஸ்டியானோ ரொனால்டோவை டம்மியாக்கி போர்ச்சுகலுடன் 1-1 என்று ட்ரா செய்தது, பிறகு இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

“நாங்கள் ரொனால்டோவை அன்று அமைதியாக்கினோம் நாளை மெஸ்சிக்கும் இதைச் செய்ய முடியும் என்று நம்புகிறோம்” என்று ஐஸ்லாந்து அணியின் ஜோஹான் பெர்க் குட்மண்ட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

”நிறைய தடுப்பாட்டங்களைச் செய்வோம் என்று நினைக்கிறேன், குறிப்பாக உலகின் தலைசிறந்த வீரர் மெஸ்சி இருக்கும் போது தடுப்பாட்டம் வலுவாக இருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் உலகின் சிறிய நாடாகிய ஐஸ்லாந்து, குரேசியா, உக்ரைன், துருக்கியை வீழ்த்தி தகுதி பெற்றுள்ளது என்பதும் அர்ஜெண்டினா வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

அர்ஜெண்டினா ரிசர்வ் கோல் கீப்பர் நஹுயெல் குஸ்மான் கூறும்போது, “நாங்கள் பொறுமைக் காக்க வேண்டும், பந்தை நகர்த்தியபடியே இடைவெளிகளைக் கண்டுணர வேண்டும், வேகமும் பந்தை அதிகம் வைத்திருப்பதும் முக்கியம், இது மிகவும் டைட் கேமக இருக்கும், இதில் பதற்றமடையாமல் ஆட வேண்டும்” என்றார்.

மெஸ்சி இல்லாத பிரண்ட்லி சர்வதேசப் போட்டிகளில் இங்கு வருவதற்கு முன் அர்ஜெண்டினா நைஜீரியாவிடம் 2-4 என்றும் ஸ்பெயினுக்கு எதிராக படுமோசமக 1-6 என்ற கோல்கள் கணக்கிலும் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

அர்ஜெண்டின அணியின் கவலைகளை அதிகரிக்கும் விதமாக கோல் கீப்பர் செர்ஜியோ ரொமீரோ மற்றும் மிட்பீல்டர் மேனுவெல் லான்ஸீனி காயமடைந்துள்ளனர்.

மெஸ்ஸியின் திறமை மட்டும் விதந்தோதப்பட்டாலும், செர்ஜியோ ஆகுயெரோ, பாவ்லோ டைபலா, கொன்சாலோ ஹிகுவெய்ன் ஆகிய திறமைகளும் உள்ளன. ஆனாலும் மெஸ்ஸி அணியை தோள்களில் தூக்கிச் செல்வார் என்று நம்பைக்கை தெரிவித்துள்ளார் பயிற்சியாளர் ஜோர்ஹே சம்போலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x