

பயங்கரவாதத்திற்கு எதிரான போரினால் சின்னாபின்னமடைந்துள்ள ஆப்கான் நாட்டில் கிரிக்கெட் மைதானம் கட்ட இந்திய 10 லட்சம் டாலர்கள் தொகையை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
காந்தஹாரின் வடக்கு புறநகர்ப் பகுதியான அயினோ மினாவில் இந்த ஸ்டேடியம் கட்டப்படவுள்ளது. இதற்காக ஆப்கன் அரசு 2012ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கியது என்பது குறிப்பிடத் தக்கது.
இது குறித்து ஆப்கான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு வானாளவ பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளது.
இந்தத் தொகையை வழங்குவதாக அறிவித்த மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
விளையாட்டு, குறிப்பாக கிரிக்கெட் மற்றும் கால்பந்து தேசங்களை இணைக்கிறது. விளையாட்டே இளைஞர்களுக்கு அதிக உற்சாகம் தருகிறது. இந்தத் தொகையும் ஆப்கான் கிரிக்கெட் வாரியம் செய்து வரும் சில முயற்சிகளும் ஆப்கானில் கிரிக்கெட் பிரபலமடைய உதவும்.
என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் தோல்வியடையாமல் சமன் செய்தது ஆப்கான் கிரிக்கெட் அணி. ஐசிசி முழு உறுப்பினர் நாட்டு அணிக்கு எதிராக முதல் முறையாக தோல்வி தழுவாமல் 4 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கான் சமன் செய்தது.
இதனையடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.