Published : 06 Jun 2018 04:27 PM
Last Updated : 06 Jun 2018 04:27 PM
டெல்லியில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலை இன்று திறக்கப்பட்டது.
ஏற்கெனவே கபில் தேவ், உசேன் போல்ட், லயோனல் மெஸ்ஸி ஆகிய விளையாட்டு வீரர்களின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது விராட் கோலியின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு விராட் கோலி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘‘என்னுடைய உருவத்தில் மெழுகச்சிலையை வைத்து, சிறப்பான உங்களின் பணியை பாராட்டுகிறேன். என்னைத் தேர்வு செய்து எனக்குச் சிலை வைத்த மேடம் டுசாட்ஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனது ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நலம்விரும்புகிகளுக்கும் நன்றி. என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற விஷயங்கள் சிறந்த நினைவுகளாக இருக்கும். ரசிகர்களின் கருத்துக்கள் என்னவாக இருக்கும் என்பதைப் பார்க்கலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நீல நிற சீருடையுடன் கையில் பேட்டை வைத்து ஷாட் அடிக்கும் விதத்தில் மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில், அவரின் சாதனைகளை குறிக்கும் விதத்தில் இந்த மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு உள்நாட்டு முதல்தர கிரிக்கெட் போட்டியில் வாழ்க்கையைத் தொடங்கி, அதன்பின் 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இடம் பெற்று அதை வென்று கொடுத்தார். அதன்பின் இந்திய அணியில் கோலியின் பங்கு சிறப்பாக இருந்ததையடுத்து அவருக்கு மத்தியஅரசு அர்ஜுனா விருதையும், ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதும் வழங்கப்பட்டது. பிசிசிஐ சார்பில் 3 முறை சிறந்த வீரருக்கான விருதும் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இந்த சிலை இன்று காட்சிக்கு வைக்கப்பட்டதும், பார்வையாளர்கள் ஏராளமானோர் வந்து பார்வையிட்டனர். மேலும் கிரிக்கெட் ரசிகர்களும் விராட் கோலி சிலை முன் நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT