பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் தங்கம் வென்றார் இந்தியாவின் அவனி லெகரா

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் தங்கம் வென்றார் இந்தியாவின் அவனி லெகரா

Published on

பாரிஸ்: பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அவனி லெகரா தங்கப் பதக்கம் வென்றார்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் (எஸ்ஹெச் 1) பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா இறுதிப் போட்டியில் 249.7 புள்ளிகள் குவித்து பாராலிம்பிக்ஸ் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸில் அவனி லெகரா 249.6 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதன்மூலம் பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளா 22 வயதான அவனி லெகரா.

இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனையான 37 வயதான மோனா அகர்வால் 228.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் ஒரே பிரிவில் 2 இந்தியர்கள் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தென் கொரியாவின்லீ யுன்ரி 246.8 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகரா கூறும்போது, “நாட்டுக்காக பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது அணி, பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in