Last Updated : 05 Jun, 2018 09:29 AM

 

Published : 05 Jun 2018 09:29 AM
Last Updated : 05 Jun 2018 09:29 AM

போர்ச்சுக்கலுக்கு பெருமை சேர்ப்பாரா ரொனால்டோ ?

லகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் பி பிரிவில் இடம் பிடித்த போர்ச்சுக்கல் அணி தனது முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்திடம் தோல்வி கண்டது. ஆனால் அதன் பின்னர் விளையாடிய 9 ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்து 27 புள்ளிகளுடன் எந்தவித சிரமமும் இல்லாமல் ரஷ்ய உலகக் கோப்பை தொடருக்குள் நுழைந்தது. தகுதி சுற்று ஆட்டங்களில் 32 கோல்கள் அடித்த போர்ச்சுக்கல் அணி வெறும் 4 கோல்களை மட்டுமே வாங்கியது. கேப்டனும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆந்த்ரே சில்வா கூட்டணி 24 கோல்களை அடித்து மிரளச் செய்திருந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சான்டோஸ் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு போர்ச்சுக்கல் அணி இதுவரை 24 ஆட்டங்களில் விளையாடி 20 வெற்றிகளை பெற்றுள்ளது. அதிலும் முக்கியமாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற யூரோ கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுக்கல் அணியின் நம்பிக்கையை மேலும் அதிகமாக்கி உள்ளது.

2014-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் போர்ச்சுக்கல் அணி 2 ஆட்டங்களில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இந்த இரு ஆட்டங்களிலும் காயம் காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறங்கவில்லை. இது ஒட்டுமொத்த அணியும் ரொனால்டோவை மட்டுமே பிரதானமாக நம்பியிருப்பதையே வெட்டவெளிச்சமாக்குகிறது. உலகக் கோப்பை தொடரில் எதிரணியினர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக சரியான களவியூகம் அமைத்து அவரை கோல் அடிக்க விடாமல் செய்தால் போர்ச்சுக்கல் அணி தடுமாற்றத்துக்குள்ளாகிவிடும்.

சமீபகாலமாக போர்ச்சுக்கல் அணி தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்துவதால் புதிய படைப்பாற்றல் இல்லாமல் உள்ளது. சென்டர் பேக் பொசிஷனில் விளையாடக்கூடிய 35 வயதான பெபெ, உலகக் கோப்பை தொடரில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். அவருடன் புரூனோ ஆல்வ்ஸ் (36), ஜோஸ் போன்டி (34) ஆகியோர் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. விங்கரான ரிக்கார்டோ குரேஷ்மாவும் (34) சிறந்த பங்களிப்புச் செய்யக்கூடும். கடந்த 4 வருடங்களில் அணியில் உள்ள மற்ற வீரர்களைவிட இவர்தான் கோல் அடிக்க அதிகளவில் உதவி புரிந்துள்ளார்.

நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தேசிய அணிக்காக இதுவரை 148 ஆட்டங்களில் விளையாடி 81 கோல்கள் அடித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு யூரோ கோப்பையை போர்ச்சுச்கல் அணி வென்றதில் ரொனால்டோ முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். தொழில் ரீதியான போட்டிகளில் ரியல் மாட்ரிக் அணிக்காக அற்புதமாக விளையாடும் ரொனால்டோ, முதன்முறையாக தேசிய அணிக்காக பெரிய அளவிலான தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தது அனைவரையும் சற்று வியக்க வைத்திருந்தது. 5 முறை ஃபிபாவின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ள 33 வயதான ரொனால்டோ இம்முறை தேசத்தின் கனவை நிறைவேற்ற சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக 5 முறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்று கொடுத்துள்ள ரொனால்டோ அந்த அணிக்காக 153 ஆட்டங்களில் விளையாடி 120 கோல்கள் அடித்துள்ளார். இதில் கடந்த சீசனில் அடித்த 15 கோல்களும் அடங்கும். ஆனால் உலகக் கோப்பை தொடர்களில் ரொனால்டோ இதுவரையிலும் பெரிய அளவில் சோபித்தது இல்லை. 2006, 2010 மற்றும் 2014 என மூன்று உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 13 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர் வெறும் 3 கோல்கள் மட்டுமே அடித்துள்ளார். தொழில் ரீதிரியான போட்டியுடன் ஒப்பிடு ம் போது இது அவரது தரநிலைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியதுதான்.

தொழில் ரீதியிலான போட்டிகளில் ரொனால்டோ இந்த சீசனில் பிரி கிக்கில் சோபிக்கவில்லை. அதாவது பாக்ஸூக்கு வெளியே வைத்து பந்தை அவர் உதைத்ததில் ஒருமுறை கூட கோல் விழவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கக்கூடிய விஷயம்தான். ஆனால் அதேவேளையில் ஜூவெண்டஸ் அணிக்கு எதிரான கால் இறுதியில் ‘பைசைக்கிள் கிக்’ முறையில் கோல் அடித்து அனைவரையும் திகைக்க வைத்தார். உலகின் சிறந்த வீரர் என்ற புகழை பெற்ற ரொனால்டோவுக்கு உலகக் கோப்பை தொடர் என்பது இதுவரை எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இந்த சோகத்துக்கு அவர், இம்முறை முடிவு கட்ட முயற்சிக்கக் கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x