Published : 25 May 2018 08:57 PM
Last Updated : 25 May 2018 08:57 PM
இங்கிலாந்தில் நடைபெறும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர்களான எம்.எஸ்.தோனி, விராட்கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி அளிக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டி 2020-ம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. 16 ஓவர்கள் வீசப்பட்டு, கடைசி ஓவரில் மட்டும் கூடுதலாக 4 பந்துகள் வீசப்படுவதே 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியாகும்.
பொதுவாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் வேறு எந்த நாட்டில் நடக்கும் கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிப்பதில்லை. அதேசமயம், வேற்று நாட்டு வீரர்கள் இங்கு வந்து விளையாடச் சிறப்பு கம்பளம் விரிக்கும். இதில் விதிவிலக்கு பாகிஸ்தான் மட்டுமே.
அதற்கு முக்கியக்காரணம் இந்திய வீரர்கள் வெளிநாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடினால், ஐபிஎல் போட்டிக்கான பிராண்ட் இமேஜ் குறைந்துவிடும், சர்வதேச அளவில் தனித்தன்மையை இழந்துவிடும் எனக் கருதி பிசிசிஐ இந்திய வீரர்களை அனுமதிப்பதில்லை.
இந்நிலையில், இங்கிலாந்தில் 2020-ம் ஆண்டு நடக்கும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய வீரர்கள் விராட்கோலி, தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி அளிக்கும் என்று இங்கிலாந்தில் வெளிவரும் டெய்லி மெயில் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கான காரணமாக, இந்திய வீரர்களை இங்கிலாந்தின் 100 பந்துகள் போட்டியில் விளையாட அனுமதிக்கும் பட்சத்தில் அந்த நாட்டில் ஐபிஎல் போட்டிக்கான முதலீட்டாளர்களை இந்தியாவில் இழுக்க முடியும் என பிசிசிஐ நம்புகிறது.
இப்போது ஐபிஎல் போட்டியில் இந்திய முதலீட்டாளர்கள் மட்டும் இருக்கும் நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் இழுக்கும் முயற்சியாகவே பிசிசிஐ அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
லண்டனில் முதலாம் ஆண்டு 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், விராட் கோலி, தோனி, ரோகித்சர்மா, ரெய்னா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
100 பந்துகள் கிரிக்கெட் போட்டியை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்காகவே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும், தங்கள் நாட்டு வீரர்களை ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விளையாட எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இங்கிலாந்தில் கோடைக்காலத்தில் தொடங்கும் கியா சூப்பர் லீக் போட்டியில் இந்திய மகளிர் அணியைப் பங்கேற்க பிசிசிஐ அனுமதிஅளித்து இருப்பதும் கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT